PUBLISHED ON : மே 28, 2018

கர்ணம் மல்லேஸ்வரி
1.6.1975
ஸ்ரீகாகுளம், ஆந்திரப் பிரதேசம்
ஆண்டு 2000. சிட்னி ஒலிம்பிக்கில்தான் பெண்களுக்கான பளு தூக்கும் போட்டி முதன்முறையாக அனுமதிக்கப்பட்டது. களத்தில் வந்து நின்றபோது அவர் முன் ஒட்டுமொத்த இந்தியாவின் கனவும் விரிந்தது. இந்தியர்களின் நூற்றாண்டு கால ஏக்கமும் எதிர்பார்ப்பும் அவரது கைகளை நம்பியே இருந்தன. எல்லோரது நம்பிக்கைகளையும் காப்பாற்றி வெண்கலம் வென்று, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார் கர்ணம் மல்லேஸ்வரி.
சிறுமியாக இருந்தபோது, அவரது சகோதரிகள் பளு தூக்கிப் பயிற்சி செய்வதை அருகில் இருந்து பார்ப்பார். ஒருநாள், அந்தப் பளு தூக்கும் வட்டுகளைத் தூக்க முயற்சித்து, காலில் போட்டுக் கொண்டார். அதற்காகக் கண்டித்த அவரது அம்மா, 'படி அல்லது வீட்டு வேலை செய்' என்று கூறிவிட்டார். கடைசியில் மல்லேஸ்வரியின் பிடிவாதத்தால் அவரது பளு தூக்கும் ஆர்வம் அம்மாவின் கண்டிப்புகளை வென்றது. மிகச் சிறந்த பயிற்சியாளர் உதவியுடன் பயிற்சியில் இறங்கினார். இவரது திறமையைக் கண்ட இந்திய விளையாட்டு ஆணையம் இவருக்குப் பயிற்சி தர முன் வந்தது.
கவனம் சிதறாமல் பயிற்சியில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருந்தார். 2000இல் நடந்த ஒலிம்பிக் போட்டியில், மொத்தம் 240 கிலோவை வெற்றிகரமாகத் தூக்கி ஒட்டு மொத்த இந்தியாவையும் பெருமைப்படச் செய்தார். விளையாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக 2004இல் அறிவித்தார். தற்போது ஆந்திராவில்
இளம் வீரர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்.
முக்கிய சாதனைகள்
1994 : உலக சாம்பியன்ஷிப் போட்டி, இரண்டு தங்கம், ஒரு வெள்ளி
1995 : ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி, தென் கொரியா, 3 தங்கம்
1996 : ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜப்பான், தங்கம்
1998 : ஆசிய விளையாட்டுப் போட்டி, வெள்ளி
விருதுகள்
1994: அர்ஜுனா
1995: ராஜிவ் காந்தி கேல் ரத்னா
1999: பத்ம ஸ்ரீ
