PUBLISHED ON : நவ 21, 2016

கேரள மாநிலம் கொச்சி பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில், டால்பின் நீந்திச்சென்றதை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் கண்டுகளித்தனர்.
டால்பின்கள், பொதுவாக ஆழ்கடலில் வசிக்கும் தன்மை கொண்டவை. அவை, கால்வாய் போன்ற ஆழம் குறைந்த பகுதிக்கு வருவது அபூர்வம். இந்நிலையில், கொச்சியில் உள்ள வைப்பின் (Vypin) கடல் முகத்துவார பகுதியில், குட்டி டால்பின் ஒன்று நீந்துவதை கண்டு, மக்கள் ஆச்சர்யமடைந்தனர். இந்த செய்தியை முதலில் யாரும் நம்பாவிட்டாலும், சிறிது நேரத்தில் அங்கு ஏராளமானோர் குவிந்தனர். டால்பின் நீந்திச் சென்றதை மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.
கடலிலிருந்து, சுமார் 15 கி.மீட்டர் நீந்தி இந்த கால்வாய் பகுதிக்கு வந்த டால்பின், மீண்டும் கடலுக்கு திரும்ப வழி தெரியாமல் தவித்து வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கால்வாய்க்குள் இறங்கிய மீனவர்கள், மீன்பிடி வலையின் உதவியோடு டால்பினை பிடித்தனர். பின்னர், அந்த டால்பினைக் கொண்டு போய், கடலில் விட்டனர். இதனையடுத்து, அந்த டால்பின் ஆழ்கடலை நோக்கி நீந்தி சென்றது.

