PUBLISHED ON : ஆக 01, 2016

''நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடு, ஒருபோதும் நண்பனை விட்டுக்கொடுக்காதே” என்று ஒரு பழமொழி இருக்கிறது. பெற்றோருக்குப் பிறகு மிக முக்கியமான உறவு நட்பு! நடக்கப் பழகி, தெருக்களில் விளையாட ஆரம்பிக்கும்போது நட்பு உருவாகி இருக்கும்! உடன் விளையாடவும் சண்டை போடவும் விடுமுறை நாட்களைக் கழிக்கவும் என ஒவ்வொரு நாளும் நண்பர்கள் இல்லாமல் நகராது. தனிமை என்னும் தீவில் ஒதுங்கவிடாமல் நம்மைக் காப்பாற்றும் 'ஷிப்'தான் இந்த 'ஃபிரண்ட்ஷிப்'!
பட்டப் பெயரில்லாத நட்பு கிடையாது.
பள்ளிக் கூடம் சேர்ந்தவுடன் எல்லாருக்கும் ஒரு பட்டப் பெயர் கிடைத்துவிடும். பெயர் சொல்வதைவிட அதைச் சொல்லி அழைப்பதுதான் அதிகமாக இருக்கும். வீடு, பள்ளிக் கூடம், கல்லூரி என ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்புது நண்பர்கள் கிடைப்பார்கள். அதுபோல, நட்பில் பிரிவு வருவதும் சாதாரணம். நட்பில், நன்றியும் மன்னிப்பும் தேவையில்லை என்றாலும் தவறு இருந்தால் நீங்களாக முன்வந்து மன்னிப்புக் கேட்கலாம். சிறு சிறு காரணங்களுக்காக நட்பை இழந்துவிடக்கூடாது.
புதிய நண்பர்கள் கிடைத்தாலும் பழைய நண்பர்களை மறப்பது நட்புக்கு அழகல்ல. நாம் இப்போது டெக் உலகத்தில்தான் வாழ்கிறோம்! நேரில் சந்திக்க முடியாமல் போனாலும் குறுந்தகவல், இ-மெயில், காணொளி மூலம் பேசுவது, வாழ்த்து அட்டை அனுப்புவது இவற்றின் மூலம் நட்பைத் தொடரலாம். தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தாலும் நீண்ட காலம் தொடர்பில் இல்லாத நண்பர்களைத் தேடுங்கள். இந்த தினத்தில் வாழ்த்துச் சொல்லிப் பாருங்கள், 'நண்பர்களில் சிறந்தவர்' என்கிற பட்டப் பெயர் உங்களைத் தேடி வரும்.
டேய்... காராச் சேவு! சொல்லுடா முட்ட பஜ்ஜி?
ஹாப்பி ஃபிரண்ட்ஷிப் டே
* ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை 'உலக நட்பு தினம்' எனக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் ௭ஆம் தேதியில் வருகிறது.
* காப்பு அல்லது வண்ணமயமான பட்டை ஒன்றையும் நட்பின் அடையாளமாக மணிக்கட்டில் கட்டுவார்கள். இந்த வழக்கம் 1980 முதல் இருக்கிறது.
