PUBLISHED ON : ஜூன் 06, 2016

'நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு' என்பது ஔவையார் வாக்கு. நல்ல புத்தகங்கள் அறிவை வளர்க்கும். பள்ளிப் படிப்பையும் தாண்டி நம் அறிவை வளர்ப்பவை நூல்கள், நூலகங்கள்.
வசதி உள்ளவர்கள் வீட்டிலேயே நூலகம் வைத்திருப்பார்கள். வசதியற்றவர்கள் படிக்க ஏற்படுத்தப்பட்டதுதான் பொது நூலகம். யார் வேண்டுமானாலும் அங்கே சென்று படிக்கலாம். வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்க உறுப்பினராகச் சேர வேண்டும்.
உலகின் மிகப் பெரிய நூலகம் அமெரிக்காவில் உள்ள (The Library of Congress) லைப்ரரி ஆஃப் காங்கிரஸ். 15.8 கோடி நூல்கள் இருக்கின்றன. சுமார் 838 மைல்கள் தூரத்திற்கு புத்தக அலமாரிகள் இருக்கின்றன.
இதில் புத்தகங்கள், ஒலி நாடாக்கள், புகைப்படங்கள், வரைபடங்கள், கையெழுத்துப் பிரதிகள் அனைத்தும் அடங்கும். சிறிய நூலகம் நியூயார்க் நகரில் இருக்கிறது. ஒரே ஒருவர் மட்டுமே அமர்ந்து படிக்க முடியும்.
மிகப் பழமையான நூலகம் எகிப்தில் சினாய் (Sinai) என்ற இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் எழும்பூரில் உள்ள கன்னிமரா நூலகம் பழமையானது. இது 1896ல் நிறுவப்பட்டது. கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் 5.5 லட்சம் புத்தகங்களுடன் தெற்காசியாவில் முதலிடம் வகிக்கிறது.
தமிழக நூலகத்துறையின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர் வே.தில்லைநாயகம். பொதுக்கல்வித்துறையின் முதல் நூலகர். தமிழக அரசின் பொதுநூலகத் துறையின் முதல் இயக்குநரும் இவரே. 'நூலக உணர்வு', 'இந்திய நூலக இயக்கம்' போன்ற நூல்களை எழுதியவர். குறிப்பேடு என்னும் இவர் எழுதிய நூல்தான் தமிழில் வெளிவந்த முதலாவது ஆண்டுநூல் (Year Book). இவரின் பிறந்த தினம் ஜூன் 10.
வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. தற்போது சென்னை தீவுத் திடலில் (ஜூன் 1 - 13) நடந்துகொண்டு இருக்கிறது.

