PUBLISHED ON : ஆக 08, 2016

ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம் ஆகஸ்ட் 13
'உலகின் சர்க்கரைக் கிண்ணம்' என அழைக்கப்படுவது, கியூபா நாடு! காரணம், இங்கே கரும்பு விளைச்சல் அதிகம். ஒரு கரும்புத் தோட்டத்தில்தான் ஃபிடல் அலெஜாண்ட்ரோ காஸ்ட்ரோ பிறந்தார். கம்யூனிச வரலாற்றில் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் ஆகியோர் வரிசையில் வைத்துக் கருதப்படுபவர்!
அமெரிக்காவின் அருகில் இருக்கும் கியூபாவை ஒரு சோசலிச நாடாக உருவாக்கிய பெருமைக்குச் சொந்தக்காரர் ஃபிடல்! இவர் இல்லையெனில் கியூபா என்ற நாடு அமெரிக்காவின் இன்னொரு மாநிலம் ஆகியிருக்கும்! பிறவிப் புரட்சியாளராக இருந்த இவர், ஒரு பெரிய நிலவுடைமைக் குடும்பத்தின் வாரிசு. இருந்தாலும் நாட்டின் விடுதலைக்காகவும் ஏகாதிபத்திய ஒழிப்புக்காகவும் சொத்து சுகங்களைத் தூக்கி எறிந்துவிட்டு போராடச் சென்றார்!
பள்ளிப் படிப்பு முடிந்து, 1941ல் கல்லூரியில் சேர்ந்தார். இங்குதான் கம்யூனிசம் இவருக்கு அறிமுகமானது. பின்னர், 1945ல் ஹவானா பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்ற போது, முழுநேர கம்யூனிசவாதியாக மாறினார். பல போராட்டங்களில் ஈடுபட்டு, தன் பேச்சுத் திறமையால் நாட்டு மக்களைக் கவர்ந்தார்.
மெக்ஸிகோவில் காஸ்ட்ரோ இருந்த போது, போராளியான சே குவேரா அறிமுகம் ஆனார். கியூபா விடுதலைப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக்கொண்ட சே, காஸ்ட்ரோவுடன் சேர்ந்து கியூப விவசாயிகளையும் இளைஞர்களையும் புரட்சிக்குத் தயார்படுத்தினார். அதன்பிறகு, கியூபாவில் காஸ்ட்ரோ தலைமையிலான சோசலிச ஆட்சி நிறுவப்பட்டது.
கியூபாவை ஆட்சி செய்த காஸ்ட்ரோவை தன்வசம் இழுக்க அமெரிக்கா முயற்சி செய்தது. 'கியூப வளங்கள், கியூப மக்களுக்கே சொந்தம்' என்று காஸ்ட்ரோ மறுத்துவிட்டார். அதனால், கியூபா மீது பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதித்தது. எல்லாவற்றையும் சமாளித்த காஸ்ட்ரோவை 638 முறை கொல்ல முயன்று தோற்றது அமெரிக்கா.
எதைப் பார்த்தும் பயப்படாத காஸ்ட்ரோவும் கியூப மக்களும் ஓயாமல் உழைத்தார்கள். உலக வரைபடத்தில் அமெரிக்காவின் காலுக்குக் கீழ் இருந்தாலும், அமெரிக்கா தொட முடியாத இரும்புக் கோட்டையாகத் திகழ்கிறது கியூபா. இதற்கெல்லாம் ஒரே காரணம், அந்தத் தேசத்தின் 'நம்பிக்கை நாயகன்' ஃபிடல் காஸ்ட்ரோ!
உலகில், நீண்ட காலத்துக்குத் தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே! 49 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்து, பிப்ரவரி 24, 2008ல் உடல்நிலை காரணமாக பதவி விலகினார்.
யுனெஸ்கோ ஆய்வின்படி, கியூபாவின் படிப்பறிவு சதவீதம் 96. தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் பெண்களின் சதவீதம் 60. பிரசவத்தின் போது இறக்கும் தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவாக இருப்பதும் இங்குதான்!
