தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/எழுத முடியாத பென்சில்!

எழுத முடியாத பென்சில்!

எழுத முடியாத பென்சில்!


PUBLISHED ON : ஜன 15, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 15, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பென்சில் செடி

ஆங்கிலப் பெயர்கள்: 'பென்சில் காக்டஸ்' (Pencil Cactus),'ஸ்டிக்ஸ் ஆன் ஃபைர்' (Sticks on Fire), 'மில்க் புஷ்' (Milk Bush)

தாவரவியல் பெயர்: 'யுபோர்பியா டிருகால்லி' (Euphorbia Tirucalli)

வேறு பெயர்கள்: தீக்குச்சிச் செடி, நெருப்புச் செடி, பென்சில் கள்ளி, பாச்சான் குச்சி, கட்டுக்கலவிக் கள்ளி

பென்சில் செடி, மிகச் சிறிய இலைகளுடன் பச்சை நிறத்தில் பளபளப்பாக பென்சில் போன்ற தடிமனில் உருண்டையான தண்டுகளுடன் இருக்கும். செடி என்று குறிப்பிட்டாலும், நான்கு மீட்டர் உயரம் வரை சிறு மரமாக வளரக்கூடியது. பாலைநிலங்களில் 6 முதல் 9 மீட்டர் உயரம் வரையில் வளரும். இதன் தாயகம் ஆப்பிரிக்கா. 'யுபோர்பியேசியே' (Euphorbiaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. உலகின் பல பாகங்களிலும் இது பரவலாக வளர்கிறது.

செடியின் அனைத்துப் பாகங்களும் பால் போன்ற திரவத்தைச் சுரக்கும் தன்மை உடையது. முட்களற்ற வழுவழுப்பான, மென்மையான தண்டுகள் நல்ல சதைப்பற்றுடன் இருக்கும். செடியின் மிகச் சிறிய பச்சை இலைகள் குறுகிய காலத்திலேயே உதிர்ந்துவிடுவதால் குச்சிகள் போன்ற பச்சைத் தண்டுகளே செடி முழுவதும் காணப்படும். இளம் தண்டுகள் மட்டும் சிறு இலைகளுடன் வளைந்து தொங்கியபடி இருக்கும். சிறு கொத்துகளாக மிகச்சிறிய மஞ்சள் பூக்களைப் பூக்கும். செதில் போன்ற தண்டுகளின் நுனியில் மஞ்சள் நிறப் பூக்கள் தோன்றுவது நெருப்புக் குச்சியைப் போலவே காட்சி தரும். சிறிய விதைகளை உடைய காய்களையும் காய்க்கும்.

பூக்களையும், சிறிய விதைகளையும் தேடி பறவைகள், வண்டுகள், அதிக அளவில் வரும். முட்கள் இல்லாததாலும், அடர்த்தியான கிளைகளுடன் இருப்பதாலும் பறவைகள் கூடுகட்ட இந்தச் செடியை அதிகம் தேர்ந்தெடுக்கின்றன. தமிழகத்தில் பல பிரிவினர், திருமணங்கள், விழாக்கள், சடங்குகளில் பால் பெருகும் இந்தச் செடியை மங்கலச் சின்னமாக உபயோகிக்கிறார்கள். இந்தச் செடியின் பால் கண்ணில் பட்டால் பார்வைக் குறைபாடு ஏற்படும். தரிசு நிலங்களிலும் எவ்விதப் பராமரிப்புமின்றி செழித்து வளரும் இச்செடி பல மருத்துவப்பயன்களையும் கொண்டது. மரு மற்றும் கொப்புளங்களை செடியின் பால் குணமாக்குகிறது. பாரம்பரிய மருத்துவத்தில் புற்றுநோய்க்கும் கல்லீரல் வீக்கத்திற்கும், கிருமித்தொற்றுகளுக்கும் சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

- அ.லோகமாதேவி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us