PUBLISHED ON : ஆக 08, 2016

ஆப்பிரிக்காவின் நைல் நதிக்கரை ஓரம் அமைந்திருப்பவை, 'அபு சிம்பெல்' (Abu Simbel) குகைக் கோயில்கள். இவை சுமார் 3300 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டவை. எகிப்து நாட்டை ஆண்ட 'இரண்டாம் பாரோ ராமசேஸ்' (Pharaoh Ramesses II) என்ற மன்னர் கி.மு. 13ஆம் நூற்றாண்டில் இதை உருவாக்கினார். அபு சிம்பெலில் மன்னர் கோயில், அரசி கோயில் என இரண்டு கோயில்கள் உள்ளன. மன்னர் கோயிலின் முன்புறம் மன்னர் ராமசேஸின் இருபது அடி உயரச் சிற்பங்கள் நான்கு உள்ளன. மேற்புறம் ராஜாளி தலையுடன் கூடிய சூரியக் கடவுள் 'ரா ஹரக்தி' (Ra Harakhti) சிலை உள்ளது. உள்புறச் சுவர்களில் மன்னரின் போர்க்கள வெற்றிகளைக் குறிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அரசி கோயில் முன், மன்னரின் மனைவி அரசி 'நெஃபர்டரி' (Nefertari) சிலைகள் இடம்பெற்றுள்ளன.
எகிப்தில் 1960களில் அஸ்வன் அணை கட்ட முயன்றபோது இந்த குகைக் கோவில்களுக்கு சேதம் ஏற்படும் நிலை உருவானது. ஒரு சர்வதேசக் குழு மூலம், இந்தக் கோயில்கள் மேடான இடத்திற்கு நகர்த்தப்பட்டன. ஆமாம், ஒட்டுமொத்த மலையை அப்படியே பாளம் பாளமாகப் பெயர்த்து, பாதுகாப்பான ஓர் இடத்தில் முன்பிருந்தது போலவே அமைத்துவிட்டார்கள். இதற்கு நாற்பது மில்லியன் டாலர் பணமும், 40 ஆண்டுகளும் செலவாகின. சிற்பக் கலைக்கும், கட்டடக் கலைக்கும் மாபெரும் உதாரணமாக இருக்கும் 'அபு சிம்பெல்', யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியச் சின்னப் பட்டியலிலும் (World Heritage Site) இடம்பெற்றுள்ளது.
