PUBLISHED ON : அக் 22, 2018

பஞ்சாப் மாநிலத்தில், வயலில் அறுவடை முடிந்தபின், பயிரின் அடிக்கட்டைகளைக் கொளுத்திவிடுவது வழக்கம். இதனால் ஆண்டுதோறும் பெருகும் புகையால், தலைநகர் டில்லி திணறுவது வாடிக்கை. புகைமூட்டத்தில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல், மோதி விபத்துகள் பெருகுவதும், பொதுமக்கள் மூச்சுத் திணறலால் அவதிப்படுவதும், இதனால் ஏற்படும் சிக்கல்கள்.
பஞ்சாப் மாநிலம், தரண் தரண் மாவட்டத்தைச் சேர்ந்த பூ ஹவேலியன் (Booh Havelian) கிராமமும் இப்புகை மண்டலத்தால் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வந்தது. இக்கிராமத்தைச் சேர்ந்த ஹர்பச்சன் சிங் இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்குத் தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டார். தனது குடும்பத்துக்குச் சொந்தமான 40 ஏக்கர் வயலில் அடிக்கட்டைகளை கொளுத்தும் வழக்கத்தை நிறுத்தினார். கடந்த ஆண்டில் தன் மகனுக்குத் திருமணம் செய்தபோது, பெண் வீட்டார் 'பாராத்' எனப்படும் ஆடம்பரச் சடங்கைச் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அதற்குப் பதிலாக, அவர்களும் வயலில் அடிக்கட்டைகளை எரிக்கும் பழக்கத்தை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமே முன்வைத்தார்.
2017ஆம் ஆண்டில் மிகஅதிக புகை எழுப்பிய கிராமங்களாக பூ ஹவேலியனும் அருகிலுள்ள ஜானுகே எனும் கிராமமும் கண்டறியப்பட்டன. எனவே, கிருஷி விக்ஞான் கேந்திரா (Krishi Vigyan Kendra - KVK) அமைப்பு, இவ்விரு கிராமங்களிலும் வயலுக்கு நெருப்பு வைக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்குப் பிரசாரம் மேற்கொண்டது. ஹர்பச்சன் தன் கிராமத்தைச் சேர்ந்த மேலும் 40 விவசாயிகளுக்குப் புகையின் தீமைகளை விளக்கி, தன் பக்கம் கொண்டுவந்தார். அவரது வயலில் நெருப்பு வைப்பதை நிறுத்தியபின், மண்வளம் பெருகியிருப்பதை அவரது விளைச்சல் உறுதிப்படுத்தியது. இதைக் கண்டும், கிராமத்தின் மற்ற விவசாயிகள் மெல்லமெல்ல மாறத் தொடங்கியுள்ளனர்.
அடிக்கட்டைகளை எரிக்காமல், உழுதுவிடுவதன் மூலம் அது உரமாக மாறுவதையும், அதனால் கிடைக்கும் நற்பலன்களையும் பற்றி பயிலரங்குகளிலும், ஆவணப்படங்களிலும் பேசி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் ஹர்பச்சன். இந்த மாற்றம் பரவலாகும்போது, பனிக் காலத்தில் ஏற்படும் காற்று மாசு குறையும் வாய்ப்புள்ளது.
