PUBLISHED ON : டிச 30, 2019

2019ஆம் ஆண்டில் பொருளாதார தேக்கநிலை, வேலையிழப்பு போன்றவை பற்றி பெரிய அளவில் பேசப்பட்டது. இதன் நடுவே நம்பிக்கைக் கீற்றாக செயற்கை நுண்ணறிவுத் துறையில் (A.I.) அதிக முன்னேற்றத்தைக் காணமுடிந்தது. அதுமட்டுமன்றி, இத்துறையில் வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது.
கிரேட் லேர்னிங் நிறுவனம் ஓர் ஆய்வை நடத்தியது. 2019ஆம் ஆண்டில் இந்தியாவில் ஏ.ஐ. துறையில் வேலைவாய்ப்புகள் கடந்த ஆண்டைவிட இருமடங்காகி இருப்பதாகத் தெரிவிக்கிறது இந்த ஆய்வு. 2018இல் 40 ஆயிரமாக இருந்த ஏ.ஐ. வேலைவாய்ப்புகள் 2019இல் 72 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
ஏ.ஐ. தொடர்பான திட்டங்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இவற்றைவிட முக்கியமாக, ஏ.ஐ. துறை தொடர்பான, 2,500 வேலையிடங்கள் காலியாக இருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்திய ஏ.ஐ. துறையில் வருவாயும் ரூ.1,600 கோடியில் இருந்து ரூ.2,950 கோடியாக உயர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஐ. நுட்பம் வேலைவாய்ப்பைப் பறிப்பதாகக் கருதப்பட்டாலும், மறு பக்கம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதையும் உணர்த்துகிறது.
2019ஆம் ஆண்டை, ஏ.ஐ. நுட்பம் பரவலாக அறியப்பட்ட ஆண்டாகவும் வைத்துக்கொள்ளலாம். செயற்கை நுண்ணறிவு என்பது, ஏதோ ஆச்சரியமும், அதிசயமும் கொண்ட அந்நியமான தொழில்நுட்பம் எனும் நிலை மாறியுள்ளது.
அன்றாட வாழ்வில் பலவிதங்களில் தாக்கம் செலுத்தக்கூடிய நவீன தொழில்நுட்பம் எனும் எண்ணம், சாதாரண மக்கள் மத்தியில் ஏற்பட்டு வருகிறது.
ஏ.ஐ.யின் துணைப் பிரிவுகளான இயந்திரவழி கற்றல் நுட்பம் (Machine Learning) போன்றவற்றின் பயன்பாடு தொடர்பான செய்திகளும், ஹோட்டல் வரவேற்பாளர், வங்கிப் பணியாளர் போன்றவற்றுக்காக ரோபோக்கள் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படுவதும் இந்த சகஜநிலையை ஏற்படுத்தியுள்ளன.
ஆம், சோபியா ரோபோ போன்றவை சர்வதேச அளவில் அறிமுகம் ஆகிக்கொண்டிருந்தன. இந்த ஆண்டு சென்னை போரூரில் ரோபோ ரெஸ்டாரன்ட் அறிமுகம் ஆனது. மற்றொரு ஹோட்டலில் ரோபோ செஃப் அறிமுகம் ஆனார் (!). சென்னையில், ரோபோ கண்காட்சியும் நடைபெற்றது.
செயற்கை நுண்ணறிவுக்கான தேவையும், பயன்பாடும் அதிகரித்து வருகின்றன. சென்னை ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த விஞ்ஞானிகள், செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை விவசாயம் உள்ளிட்ட துறைப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பதற்கான ஏ.ஐ.4பாரத் (AI4Bharat) எனும் ஏ.ஐ. மேடையை உருவாக்கியுள்ளனர். ஏ.ஐ. தொடர்பான பாடத்திட்டங்களை வழங்க ஒன் போர்த் லேப்ஸ் எனும் அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏ.ஐ. வளர்ச்சியில், இந்தியா பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், இந்த நடவடிக்கைகள் அமைந்தன. இதனிடையே, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலேயே செயற்கை நுண்ணறிவு பாடமும், வரும் ஆண்டு முதல் இடம்பெற இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
இவை எல்லாமே நம்பிக்கை அளிக்கும் செய்திகள். ஒரு பக்கம் ஏ.ஐ. நுட்பத்தின் தாக்கம், முகமறிதல் அடையாள அங்கீகாரம் (Facial recognition) பாதிப்புகள் போன்ற சர்ச்சைகளை மறுப்பதற்கில்லை. அதேநேரம் செயற்கை நுண்ணறிவுத் துறை வளர்ச்சிக்கான சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது.
- சைபர்சிம்மன்
