PUBLISHED ON : டிச 30, 2019

பெரு நிறுவனங்களின் செயற்படு திறனைக் கண்காணிப்பதற்காக, ஏ.ஐ. அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, அதை வெற்றிகரமாகவும் செயற்படுத்திக் காட்டியுள்ளார்கள் நிபுணர்கள்.
இயந்திரவழி கற்றல் (Machine Learning) என்பதன் வழியாக, வணிகம் பற்றிய முடிவுகளை ஆராய்ந்து, ஆலோசனை சொல்வதில் ஏ.ஐ.யின் பங்கு பெருமளவில் உயர்ந்துள்ளது.
தானியங்கி கார்களின் செயற்பாட்டில், 2017இல் தொடங்கப்பட்ட முயற்சிகள் தோல்வியுற்றன. ஆனால், 2019இல் அதன் நிலவரம் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலிருந்து, போக்குவரத்து தகவல்களைச் சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. அப்பணி முடிந்ததும், 2020இல் தானியங்கி வாகனங்கள், அமெரிக்க சாலைகளில் செல்வதைப் பார்க்கலாம்.
முக அடையாள அங்கீகாரம் (Facial recognition system) 2019இல் நடைமுறைக்கு வந்தது. இனி அடையாள அட்டை வேண்டாம், பஞ்சிங் மெஷின் போன்ற பயோமெட்ரிக்ஸ் சாதனங்களும் வேண்டாம். தூரத்தில் நீங்கள் வரும்போதே உங்களது முகத்தை அடையாளம் கண்டுகொண்டு, அலுவலகக் கதவுகள் உங்களுக்காகத் திறக்கும்.
மொபைலைத் திறக்க கோலம் போடத் தேவையில்லை. பாஸ்வேர்டு, பின் நம்பர் எதுவும் வேண்டாம். திரையை உயிர்ப்பித்து, முகத்தைக் காட்டினால் போதும். இனிவரும் காலங்களில் பொது இடங்களில் யாரை வேண்டுமானாலும் அடையாளம் காணமுடியும்.
நகரங்களின் பாதுகாப்பு பலப்படும். மக்கள் எங்கே போனாலும் அவர்களைக் கண்காணிப்பது சுலபமாகிவிடும். குற்றச் செயற்பாடு கொண்டவர்கள் என்ன செய்வார்கள் என்பதைக் கணிக்கமுடியும். இத்தகைய சாத்தியங்களை ஏ.ஐ.இன் முக அடையாள அங்கீகாரத் தொழில்நுட்பம் வழங்கியுள்ளது.
இதுதவிர, வேதியியல் துறையில், மூலக்கூறுகளின் கட்டமைப்பை மாற்றியமைப்பது, தேவையான நேரத்தில் மூலக்கூறுகளைச் சிதைத்து, மீண்டும் உருவாக்குவது போன்ற விஷயங்களில், ஏ.ஐ. உள்நுழைந்துள்ளது.
ஃபேஷன் துறையில் மக்களின் ரசனையைத் தாமே புரிந்துகொண்டு, ஆடைகளை வடிவமைப்பது, நமது பழக்கவழக்கத்தைக் கணித்து, நமக்கான உணவு, வேலை தேர்வுகளை வரிசைப்படுத்துவது என்று, பல்வேறு விஷயங்கள் பற்றிய ஆய்வுகளும் 2019இல் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளன.
- ராம்கி
