PUBLISHED ON : செப் 12, 2016

காற்றைக் கல் ஆக்க முடியுமா? முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்! சரி, காற்றை ஏன் கல் ஆக ஆக்க வேண்டும், அதனால் என்ன பயன் என்ற கேள்வி நமக்குள் எழும்! கரியமில வாயுவை (Carbon Di oxide) கல்லாக மாற்றுவதன் மூலம் பூமியை வெப்பமடையச் செய்யும் வாயுக்கள் வெளிவருவதைக் குறைக்கலாம். இது புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கிறார்கள்.
காற்று எப்படிக் கல் ஆக்கப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்வோம். கரியமில வாயுவை நீரில் கரைத்து எரிமலைப் பாறைகள் அதிக அளவில் உள்ள இடங்களில் பூமிக்கு அடியில் ஆழமான இடத்தில் அது செலுத்தப்படுகிறது. அப்படிச் செலுத்தப்படும் கரியமில வாயு, ஆழத்தில் உள்ள எரிமலைத் தாதுக்களுடன் ரசாயன மாற்றம் பெற்று, திடமான சாக்பீஸ் போன்ற ஒரு பொருளாக மாற்றம் அடைகிறது. கல் போன்று மாறிவிட்ட இந்த திடப்பொருள் புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்துகிறது. உலகம் முழுவதும் எரிமலைப் பாறைகள் அதிக அளவில் உள்ளதால், இந்த முறையைப் பயன்படுத்தி புவி வெப்பமயமாதலைத் தடுக்கலாம். 'கார்ப்ஃபிக்ஸ்' (CarbFix) என்ற இந்த ஆய்வை ஐஸ்லாந்து நாட்டின் விஞ்ஞானிகள் செய்து இருக்கிறார்கள்.
