PUBLISHED ON : மே 16, 2016
சர்வதேச பல்லுயிர்ப் பெருக்க தினம் மே 22
இந்தப் பூமி நமக்கும் மட்டுமா சொந்தம்? தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் பல்வேறு உயிரினங்களுக்கும் சொந்தம் இல்லையா? கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் முதல் திமிங்கிலம், யானை போன்ற மிகப் பெரிய உயிரினங்கள்வரை எத்தனையோ உயிர்கள் நாம் வாழும் பூமியில் வாழ்கின்றன. அத்தனை உயிர்களும் வாழ்க்கைச் சுழற்சியின் உறுப்பினர்கள். ஆனால், அந்த உயிரினங்கள் இரண்டு காரணங்களால் அழிந்துகொண்டே வருகின்றன.
1. இயற்கையால் ஏற்படுவது: நிலநடுக்கம், வெள்ளம், நோய்கள், மகரந்தச் சேர்க்கை நடைபெறாமல் இருப்பது, உயிரினங்களுக்கு இடையே ஏற்படும் சண்டைகள்.
2. மனிதர்களால் உண்டாக்கப்படுவது: விலங்குகள் வாழும் சூழ்நிலையை அழித்தல் அல்லது மாற்றுதல், வனங்களில் தொழிற்சாலைகளை அமைத்தல், நகர்ப்புற வளர்ச்சிக்காக மரங்களை வெட்டுதல், அதிகப்படியான மேய்ச்சல்.
இது போன்ற காரணங்களால் அவை அழிவதைத் தடுக்க வேண்டும். உயிரினங்களை அவற்றின் இயற்கைச் சூழ்நிலையில் வைத்துப் பாதுகாப்பதை 'அதே நிலையில் காப்பாற்றுவது' என்கிறோம். இயற்கை அல்லாத மற்ற இடங்களில் வைத்துப் பாதுகாப்பதை 'மாறிய வகையில் காப்பாற்றுவது' என்கிறோம்.
இப்படி, உயிரினங்களைக் காக்கும் திட்டத்தை வரவேற்கலாம். ஆனால், அவற்றின் வாழிடங்களில் வைத்துக் காப்பாற்றினால்தான் சிறந்த முறையில் வாழும் என்பது சர்வதேச அளவில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
நாம் வசிக்க வீடு அவசியம். நம் வீட்டை யாராவது அழித்தால் நம்மால் வாழ முடியாது. ஆனால், மக்களாகிய நாம் இயற்கையை அழித்து விலங்குகளின் வாழிடத்தை அழிக்கிறோம். இது சரியா?
மனித குல வளர்ச்சிக்கு வன உயிரினங்களின் பங்களிப்பு மிக அவசியம். அப்படி இருக்கும்போது அவற்றின் அழிவுக்கு நாமே காரணமாக இருந்தால் எப்படி? அவற்றைக் காப்பாற்றுவது நம் கடமை. எல்லா உயிர்களும் நம் உறவு என்கிற சிந்தனையைத் தூண்டவே 'பல்லுயிர்ப் பெருக்க தினம்' வருடந்தோறும் உலகம் முழுக்க அனுசரிக்கப்படுகிறது.
நம்மூரில் 2000 வருஷங்களுக்கு முன்பே, 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை' என்று எழுதி வைத்துவிட்டார் திருவள்ளுவர். இன்னும் அதே நிலை தொடர்கிறது.
ஆரவல்லி பல்லுயிர்ப் பூங்கா: டில்லியில், 692 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது இந்தப் பல்லுயிர்ச்சூழல் பூங்கா. டில்லி வளர்ச்சி ஆணையம் மற்றும் டில்லி பல்கலைக்கழகம் மூலம் இந்த இயற்கைப் பூங்கா பராமரிக்கப்படுகிறது.
