PUBLISHED ON : மே 16, 2016
உலக தொலைத் தொடர்பு தினம் மே 17
நூலைத் தீப்பெட்டிகளுக்கு இடையே கட்டி, அருகே இருப்பவரோடு பேச தீப்பெட்டி போன் செய்து விளையாடினார்கள் போன தலைமுறைச் சிறுவர்கள். இன்றைய ஸ்மார்ட் உலகச் சிறுவர்களாகிய நாம் ஸ்மார்ட் போனில் கேண்டி க்ரஷ் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.
தந்தி, ட்ரங்க் கால் என்று ஆமை வேகத்தில் இருந்த தொலைத் தொடர்பு மின்னஞ்சல், குறுஞ்செய்தி, வாட்ஸாப் என நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியால் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.
உலகில், 1937ல் கண்டுபிடிக்கப்பட்ட 'எலெக்ட்ரிக் டெலிகிராப்' முதல் தற்போதுள்ள புதிய சாதனங்கள்வரை தொலைத் தொடர்புத் துறை பல்வேறு வளர்ச்சிகளை அடைந்துள்ளது. இதில் திருப்புமுனையாக, தொலைபேசியைக் கண்டுபிடித்து புதிய மாற்றத்தை நிகழ்த்தினார் கிரஹாம் பெல்!
வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, அலைபேசி, ஃபேக்ஸ், மின்னஞ்சல், இணையதளம், முகம் பார்த்துப் பேசும் அலைபேசி இணைப்புகள் என தொலைத் தொடர்புத் துறையில் மனிதன் கண்ட சாதனைகள் ஏராளம்!
இவையெல்லாம் இன்றைய மக்களின் அத்தியாவசியத் தேவைகளாக மாறிவிட்டன. இருந்தாலும், இதன் பயன்பாடு கிராமப்புறப் பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டும் என்பதில்தான் முழுமை இருக்கிறது.
அதேநேரம், தொலைத் தொடர்பின் அசுர வளர்ச்சி மனித குல அழிவுகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலக நாடுகளைக் கண்காணித்தல், பிற நாட்டு ரகசியங்களை அறிதல் போன்ற சில பிரச்னைகளுக்கும் இது அடிப்படையாக அமையலாம் எனக் கருதப்படுகிறது.
என்ன இருந்தாலும் மில்லினியம் கால மக்கள் ஒருவருக்கு ஒருவர் தகவல் பரிமாறிக்கொள்ளாமல் இருக்க முடியுமா? ஆனால், இன்டர்நெட் வழியாக நமக்குக் கிடைக்கும் பலதரப்பட்ட தகவல்களில் தேவையானது எது? தேவையற்றது எது? எனத் தேர்ந்தெடுப்பது நம் கைகளில்தான் இருக்கிறது!
* உலக தொலைத் தொடர்பு தினத்தை சர்வதேச தொலைத் தொடர்பு சங்கம் International Telecommunication Union (ITU) கொண்டாடிவருகிறது.
* 1969 மே 17ல் சர்வதேச தொலைத் தொடர்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. புதிய தொழில்நுட்பங்களை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு வருடமும் மே 17ஆம் தேதி 'உலக தொலைத் தொடர்பு தினம்' கடைபிடிக்கப்படுகிறது.
