
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
பூமியில் உயிர்களுக்கு மிக ஆபத்தான இடமென்று ஏதாவது இருக்கிறதா?
எஸ். தினேஷ்குமார், 8ஆம் வகுப்பு, ராமகிருஷ்ணா மிஷன் உறைவிடப் பள்ளி, மயிலாப்பூர், சென்னை.
ஆபத்தான இடமென்றால் யாருக்கு ஆபத்து? மனிதர்களால் நெருங்க முடியாத எரிமலையின் வாயிலில்கூட நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. இதுபோன்ற உயரமான இடத்தில் வாழும் உயிரிகளை, உச்ச விரும்பி நுண்ணுயிரி (Extremophile) அல்லது 'எல்லைக்கோட்டுச் சூழல் உயிரி' என்று அழைக்கின்றனர்.
வாழ்வதற்கே தகுதியற்றது என நாம் கருதும் வெப்பமுடைய வெந்நீர் ஊற்றுகள், ஆர்க்டிக் கடலில் உள்ள உறைபனிக்குக் கீழேயும், அம்மோனியா, ஹைட்ரஜன் சல்ஃபைடு போன்ற நச்சு வாயுக்கள் நிரம்பிய சூழலிலும் இதுபோன்ற உச்சவிரும்பி நுண்ணுயிரிகள் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் மிகவும் ஆழமான பகுதி மரியானா அகழி. 10,000 மீட்டர் ஆழம். தரைப்பரப்பில் உள்ள காற்றழுத்தத்தைப் போல ஆயிரம் மடங்கு அழுத்தம் கீழே உள்ளது. அங்கே மனிதன் சென்றால் அப்பளம் போல அழுந்திவிடுவான். அங்கும் சிறப்பான உயிரிகள் உள்ளன. அவற்றைத் தரைக்கு மேலே கொண்டுவந்தால், காற்று ஊதிய பலூன் போல, உடல் பெரிதாகிப் பெரிதாகி வெடித்துச் சிதறிவிடும்.
மீதேனோஜென்ஸ் எனப்படும் மீதேன் விரும்பி நுண்ணுயிர்களுக்கு ஆக்சிஜன் நச்சாக அமையும். ஆக்சிஜன் இல்லாத சூழலில் இவை தழைத்துச் செழித்து வளரும். சமீபத்தில் விண்வெளியில் விண்வெளிக்கூடத்தின் வெளியே, நுண்ணுயிர்கள் இருப்பதைக் கண்டு அறிவியலாளர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
பின்லாந்தில் ஒரு பேக்கரி, மின்மினிப் பூச்சிகளில் இருக்கும் புரோட்டீன்களைச் சேர்த்து, பிரெட் தயாரித்துள்ளது. அறிவியல் ரீதியாக இது நல்லதா, கெட்டதா?
எஸ்.ஆசிக்முகம்மது, 8ஆம் வகுப்பு, லீடர்ஸ் அகாடமி மெட்ரிக் பள்ளி, காரைக்குடி.
கேட்கவே அருவருப்பாக இருக்கிறது என நீங்கள் கருதலாம். 80 சதவீத நாடுகளில் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் பழக்கம் உள்ளது. இந்தியாவில், பஸ்தர் பிரதேசத்தில் சிற்றெறும்பு சட்னி மிகவும் பிரபலம். உலகில் 1,900க்கும் மேற்பட்ட பூச்சி இனங்கள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன.
நீங்களும் நானும் கூட பூச்சிகளை உண்கிறோம். நமது கவனத்துக்கு அவை வருவதில்லை அவ்வளவே! அரிசி, கோதுமை, காய்கனிகள் முதலிய எல்லா தாவரப் பொருட்களிலும் அசுவினி எனப்படும் செடிப்பேன் (Aphids) இருக்கும். சாம்பார்பொடி போன்ற பொருட்களில் தலை, கால் உடைந்த பூச்சிகளின் பாகங்கள் இருக்கும். பிறந்தநாள் முதல் இந்த உணவைத்தான் நாம் உண்கிறோம்; இதனால் நமக்குப் பிரச்னை எதுவுமில்லை. அதுபோல பின்லாந்து நாட்டில் மின்மினிப் பூச்சிகளை பிரெட் உணவில் சேர்த்து அவர்கள் விரும்பும் உணவை உண்கிறார்கள். இதற்கும் அறிவியலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
ஒருசில பூக்கள், குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டும் பூக்கக் காரணம் என்ன? காலத்துக்கும் பூக்கள் பூப்பதற்கும் என்ன தொடர்பு?
க.ஹரினா, 7ஆம் வகுப்பு, எலைட் மெட்ரிக் பள்ளி, ஏர்வாடி.
இரவு முடிந்து காலை மலர்வதை உணரும்படியான அமைப்பைத் தாவரங்கள் கொண்டுள்ளன. தாவரங்களில் ஃபைட்டோகுரோம் எனும் நிறமி வேதிப்பொருள் உள்ளது. இது ஒளி உணரும் தன்மை கொண்டது. இந்த மூலக்கூறில் ஒளி படரும்போது அதன் வடிவம் மாறும். இதன் தொடர்ச்சியாக, தாவரத்தில் பல்வேறு உடற்கூறு வேதி மாற்றங்கள் ஏற்படும். இதன் வழியே தாவரம் பகல், இரவை அறிந்து கொள்கிறது.
ஒரு நாளில் காலையில் சூரியஒளி படரத் தொடங்கி, நண்பகலில் கூடுதல் நிலையை அடையும். பின்னர் மாலையில் (அந்தி சாயும்போது) சூரியஒளியின் அளவு குறையத் தொடங்கும். இந்த மாற்றங்களைத் தாவரங்களால் உணர முடியும். எனவேதான், சூரியன் உதிக்கும்போது மலரும் பூ, அந்தி சாயும் நேரத்தில் மலரும் பூ, நடுநிசியில் மலரும் பூ எனப் பல்வேறு பூக்கும் தன்மையுடைய பூக்கள் உள்ளன.
எப்படி ஒரு நாளில் சூரிய ஒளியின் அளவு கூடிக் குறைகிறதோ, அதுபோல ஓராண்டில் பகல் பொழுதின் காலம் கூடிக் குறையும். ஒவ்வொரு நாளும் பகல் பொழுது 12 மணிநேரம் இரவு 12 மணிநேரம் என இயல்பாக இருப்பதாக நாம் கருதுவோம். ஆனால், ஆண்டில் இரண்டு நாட்களில் மட்டுமே சம இரவு பகல்கள் அமையும். மற்ற நாட்களில் இரவு அல்லது பகல் கூடுதலாக அமையும்.
பூமியின் வடகோளத்தில் டிசம்பர் 21 மிகக் குறைவான பகல் பொழுதாக அமையும். 2018 ஜூன் 22 அன்று இந்த ஆண்டின் மிகக் கூடுதலான பகல் பொழுதை சென்னை சந்திக்கும். அன்று பகல் பொழுதின் காலம் 12:53:48 என அமையும். பகல் பொழுதின் கால இடைவெளியை அறியும்படியான அமைப்பும் தாவரங்களில் உள்ளது.
இதனை ஒளிக்காலத்துவம் அல்லது ஒளிக்காலப்பேறு (Photoperiodism) என்பார்கள். தாவரங்களில் இந்த நிகழ்வு எப்படி ஏற்படுகிறது என்பதை அறிந்த மேலைநாட்டுத் தாவரவியலாளர்கள், கிறிஸ்துமஸ் அல்லது ஈஸ்டர் பண்டிகையின்போது, சரியாக மலர்கள் மலரும்படி செயற்கையாக மாற்றி அமைத்துள்ளனர்.

