PUBLISHED ON : ஜூன் 25, 2018

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
மழைக்காலத்தில் இடி இடித்தபோது எங்கள் வீட்டு மின்விசிறி பழுதானது. அழைப்பு மணியும் தானாக ஒலித்தது. மின்சாரம் இல்லாத நிலையில் இவை எப்படிச் சாத்தியம்?
ஆகாஷ் ராஜ், 6ஆம் வகுப்பு, டி.என்.பி.எம்.எம். மெட்ரிக் பள்ளி, ராஜபாளையம், விருதுநகர்.
மழையின்போது 'சடார்' என வேகமாக மின்னல் பாய்வதால், காற்று விரிவடையும். இந்த பெரும் சத்தத்தையே 'இடி' என்கிறோம். ஒலியைவிட ஒளியின் வேகம் அதிகம் என்பதால், முதலில் மின்னல் தெரிந்து, பிறகு இடிச்சத்தம் கேட்கும். இடி இடிக்கும்போது மேகத்தில் இருந்து நிலை மின்சாரம் பூமி நோக்கி மின்னலாகப் பாயும். மேகங்கள் ஒன்றுடன் ஒன்று உரசும்போதும் மின்னூட்டம் பெறும். எதிரெதிர் மின்னூட்டம் பெற்ற மேகங்கள் அருகருகே வரும்போது, காற்றின் வழியாக மின் பரிமாற்றம் ஏற்படும். அப்போது ஏற்படுகிற ஒளிக்கீற்றானது, 'மின்னலாகி' மரங்களின் வழியே நிலத்தில் பாயும்.
சில சமயங்களில், மின்னல் தரும் நிலைமின்சாரம், நமது வீட்டு மின்கருவிகளைப் பாதித்து அதனை இயக்கிவிடும். அது மிக மிக அதிகமாகி, மின்கருவி பழுதாகவும் வாய்ப்பு உண்டு. எனவேதான், மழைக்காலங்களில் இடி, மின்னலின்போது மின் கருவிகளை இயக்காமல் இருக்க வேண்டும்.
ஆல்கஹால் ஒரு எரிபொருள்தானே? இதை ஏன் வாகனங்களுக்குப் பயன்படுத்த முடிவதில்லை?
ஏ.ஆர்.அருணேஸ்வரன், 9ஆம் வகுப்பு, எஸ்.எஸ்.வி.சாலா மெட்ரிக் பள்ளி, மேலூர், மதுரை.
மெத்தனால் (Methanol) எனும் எரிசாராயம், எத்தனால் (Ethanol), புரப்பனால் (Propanol), பியூட்டனால் (Butanol) போன்ற ஆல்கஹால் வேதிவகையைச் சார்ந்த பொருட்களே எரிபொருட்களாகப் பயன்பட்டு வருகின்றன. இவற்றில் சில, வேறு பொருளுடன் கலந்து ராக்கெட்டுகளில் எரிபொருளாகப் பயன்படுகிறது. ஆயினும், எந்த எரிபொருளை முதன்மையாகப் பயன்படுத்துவது என்பது பல்வேறு குணங்களைப் பொறுத்து அமையும்.
எடுத்துக்காட்டாக, ஒரு லிட்டர் எத்தனால் 235 லட்சம் ஜுல் ஆற்றலைத் தரும். ஒரு லிட்டர் பெட்ரோல் 335 லட்சம் ஜுல் அதாவது 30 சதவீதம் கூடுதலாக ஆற்றலைத் தரும். எனவே வாகனங்களில் எத்தனாலை நிரப்பினால் எரிபொருள் நிரப்பும் டேங்க் பெரிதாக வைக்க வேண்டியிருக்கும். சில எரிபொருட்கள் குறைவான வெப்பத்திலேயே தீப்பற்றும். அதாவது அவை தீப்பற்றினாலும் அதன் வெப்பநிலை குறைவு என்பதால், மற்ற பொருட்களைத் தீப்பிடிக்க வைக்காது. மண்ணெண்ணெய் போன்ற எரிபொருளின் தீப்பற்றும் வெப்பநிலை மிகமிகக் கூடுதல். இவ்வாறு, எரிபொருட்கள் இடையே உள்ள பல்வேறு குணங்களை வைத்து எரிபொருட்களைத் தேவைக்கேற்பப் பயன்படுத்துகிறார்கள்.
இலையுதிர் காலத்தில் நிறம் மாறும் இலைகள், கோடை காலத்தில் ஏன் மாறுவதில்லை?
ரா.ஆதர்ஷ், 7ஆம் வகுப்பு, ஏ.வி. பள்ளி. ஆதம்பாக்கம், சென்னை.
இலையுதிர் காலத்தில், குளிர்ப்பிரதேச மரங்களில்தான், இலைகளின் நிறம் மாறும். தாவரங்களில் ஒளிச்சேர்க்கை செய்ய உதவும் பச்சையம் (Chlorophyll) கூடுதலாக இருப்பதால், இலை பச்சை நிறத்தில் தெரிகிறது. இருந்தாலும், கேரட் போன்ற காய்கனிகளில் உள்ள மஞ்சள், ஆரஞ்சு நிறம் தரும் கரோட்டினாய்டுகள் (Carotenoids), சிவப்பு, இளஞ்சிவப்பு (Pink) நிறங்கள் தரும் அந்தோசையனின் (Anthocyanins) போன்ற நிறமிப் பொருட்களும் இலைகளின் நிறத்துக்குக் காரணமாக உள்ளன.
குளிர்காலத்தில் ஒளிச்சேர்க்கை சாத்தியம் இல்லாதபோது, தாவரங்கள் வீணாக புதிய பச்சையத்தைத் தயாரிப்பது இல்லை. எனவே, குளிர்காலத்தில் பச்சையம் குறைந்து இலைகளில் உள்ள வேறு நிறமிகள் தரும் நிறம் இலைகளில் தெரிய ஆரம்பிக்கும். அவ்வாறுதான் இலைகளின் நிறம் மாறுவது போன்ற தோற்றம் இலையுதிர் காலத்தில் ஏற்படுகிறது.
மனிதனின் நுண்ணறிவு விகிதத்தை (IQ) அதிகரிப்பது எப்படி?
சை.சையத் இர்பான் ஷகாபுதீன், 9ஆம் வகுப்பு, புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி, திண்டிவனம்.
மனிதனின் நுண்ணறிவு, மூளை வளர்ச்சி சார்ந்தது. இரண்டு வயது ஆவதற்கு முன்பே, மூளை முதிர்ச்சி அடைந்து, அளவில் 80 சதவீதம் வளர்ந்திருக்கும். ஐந்து வயதுக்குள் 90 சதவீத வளர்ச்சியும் 14 - 19 வயதுக்குள் 100 சதவீத வளர்ச்சியையும் அடைந்துவிடும். எனவே, குழந்தைகள், இளம் வயதினருக்கு போதிய ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். குழந்தைப் பருவத்தில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடே, உடல் வளர்ச்சி அடைந்த நிலையில் மூளை வளர்ச்சி குறையக் காரணம்.
புத்தகத்தில் ஒரு பத்தியைப் படித்து, அதில் சொல்ல வந்துள்ள செய்தியைப் புரிந்துகொண்டு, கேள்விக்கு விடை தர முடிகிறதா என்ற திறனை வைத்தே, நுண்ணறிவு விகிதத்தை (Intelligence quotient) அளவிடுகிறார்கள். இந்தத் திறனை வளர்த்துக்கொள்ள பல்வேறு புத்தகங்களைப் படிக்க வேண்டும். வாரம் அல்லது மாதம் ஒரு புத்தகம் எனப் படித்து வந்தால் இந்தத் திறன் தானாக வளரும்.
இதுபோல மதிப்பீடு செய்யும் பல்வேறு திறன்கள் குறித்த அறிமுகமும் பழக்கமும் நுண்ணறிவு விகிதத்தைக் கூட்ட உதவும்.
