sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

வெங்கியை கேளுங்கள்!

/

வெங்கியை கேளுங்கள்!

வெங்கியை கேளுங்கள்!

வெங்கியை கேளுங்கள்!


PUBLISHED ON : ஜூன் 06, 2016

Google News

PUBLISHED ON : ஜூன் 06, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளிர்சாதனப் பெட்டியில் (AC) யில் இருந்து வெளியேறும் நீரை சமையலுக்குப் பயன்படுத்த முடியுமா? முடியாது என்றால் ஏன்?

R.அபிநயா, 7ஆம் வகுப்பு, KCAD சிதம்பரம் ஞானகிரி மேல்நிலைப்பள்ளி, சாத்தூர்.


குளிர்சாதனப் பெட்டியில் குளிர்விப்பான் (Refrigerant) அடைத்து இருக்கும். ஏசி இயந்திரத்தில் மெல்லிய குழாய் மூலம் அந்தக் குளிர்ந்த குளிர்விப்பான் வாயுவை சுற்ற வைப்பார்கள். அறைக்குள் உள்ள வெப்பக் காற்று இந்த குளிர்ந்த குழாயில் படும்போது குளிர்ச்சி அடையும். அவ்வாறுதான் அந்த அறை குளிரூட்டப்படும். கண்ணாடி டம்ளரில் ஐஸ் கட்டியை வைத்தால் காற்றில் உள்ள நீராவி படிந்து குளிர்ந்து நீர்த் திவலைகள் ஆவது போல அறையில் உள்ள காற்றில் கலந்துள்ள நீராவி இந்தக் குளிர்க் குழாய்மீது படிந்து குளிர்ந்து நீர்த்திவலை ஆகும். அதுதான் ஏசி இயந்திரத்தில் வெளிப்படும் நீர்க் கசிவு. இந்த நீரில் தூசு தும்புகள் உட்பட பல மாசுகள் இருக்கும் என்பதால் இது குடிக்கவோ, சமைக்கவோ உகந்தது அல்ல.

இடி விழும்போது பச்சை மரத்தின் கீழ் நிற்கக் கூடாது என்கிறார்களே ஏன்?

V.அனுப், 11ஆம் வகுப்பு, ஸ்ரீவெங்கடகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி, கணியூர்.


இடி என்பது மின்னலின் ஜோடி. மின்னல் என்பது உயர் அழுத்த நிலை மின்சாரம் காற்றில் வெகு வேகமாகப் பரவும்போது ஏற்படுத்தும் அயனி மண்டல ஒளிர்வு. ஆகாயத்தில் திரளும் நிலை மின்சாரம் பூமியில் 'எர்த்' ஆகி மின்னலாகப் பாய்கிறது. மின்னல் காற்றில் பாயும்போது எந்தத் திசையில் பாயும் என்பது இடையே உள்ள பொருள்களைச் சார்ந்து அமையும். பச்சை மரத்தை நோக்கி மின்னல் மின்சாரம் பாயும் வாய்ப்பு கூடுதல். மிகு அழுத்த மின்சாரம் தாக்கி மரணம்கூட நேரலாம். எனவேதான் பச்சை மரத்தின் கீழே நிற்கக்கூடாது.

இடி இடிக்கும்போது கேட்கும் சத்தம், மின்னல் வரும்போது கேட்பதில்லையே, ஏன்?

எம்.முனிஷ்குமார், 11ஆம் வகுப்பு, ஸ்ரீவெங்கடகிருஷ்ணா மே.நி.பள்ளி, கணியூர்.


காற்றில் கையை வேகமாக ஆட்டிப் பாருங்கள். சத்தம் கேட்கும். அதுபோல வெகு வேகமாக மின்னல் காற்றில் பரவும்போது காற்றில் விரிசல் ஏற்பட்டது அது ஒலியாகப் பரவும். அதுதான் இடி. எனவே மின்னல் இல்லாமல் இடி இல்லை. ஆயினும் மின்னல் வெகு தொலைவில் ஏற்பட்டால் ஒளி எல்லா திசையிலும் வெகு தொலைவு பரவும். ஒலி வெகு தொலைவு பரவ முடியாது. சில சமயம், குறிப்பாகக் கோடைக் காலத்தில், இடி சத்தம் இல்லாமல் மின்னல் மட்டும் காட்சி தரும். ஆயினும் அந்த மின்னல் அருகே நாம் இருந்தால் நமக்கு இடி சத்தம் கேட்கும்.



தாயிடம் இருந்து மட்டுமே வழி வழியாக வரும் மைட்டோகாண்ட்ரியாவின் பங்கு என்ன?

சுந்தரம் முத்தையா, சிலமலை
.

நமது செல்களின் நடுவே உள்ள செல் கருவில்தான் முக்கிய டிஎன்ஏ (DNA) உள்ளது. இதில் பல மரபணுக்கள் (Genes) உள்ளன. சமையல் குறிப்பு போல செல்களில் நடைபெறவேண்டிய பல்வேறு உயிரி வேதியியல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் ஆணைத் தொடர் இந்த டிஎன்ஏவில் உள்ளது. செல் கருவில் உள்ள டிஎன்ஏவில் சரி பாதி தாயிடமிருந்தும் சரிபாதி தந்தையிடமிருந்தும் வருகிறது. செல் கருவிற்கு வெளியே டிஎன்ஏவைக் கொண்டுள்ளது மைட்டோ காண்ட்ரியா (Mitochondria). மனித மைட்டோ காண்ட்ரியாவின் அளவு வெறும் 16569 ஜோடி இணைதாங்கிகள் (DNA Base Pairs) மட்டுமே. எனினும் இதில் முக்கிய முப்பத்தி ஏழு ஜீன்கள் பொதிந்துள்ளன. ஆக்சிஜன் மற்றும் எளிய சர்க்கரை பொருள்களைக் கொண்டு உடலுக்கு வேண்டிய ஆற்றல் பொருளான ATPயை தயாரிப்பது மைட்டோகாண்ட்ரியா என்பதால் இதை 'செல்களின் ஆற்றல் மூலம்' என்பார்கள். ஆற்றலைத் தயாரித்துக் கொடுப்பது மட்டுமின்றி செல்களின் சுய அழிப்பு (Apoptosis), கொலஸ்டிரால் தயாரிப்பு, ரத்தத்தின் ஹீமோகுளோபினின் மைய வேதிப் பொருளான ஹீம் முதலிய முக்கிய உயிரிவேதிப் பொருள்களைத் தயாரிப்பதும் மைட்டோ காண்ட்ரியாதான்.

வானத்தில் ஒரு நாள், ஓர் இடத்தில் இருக்கும் நட்சத்திரம் மறுநாள் அதே இடத்தில் தெரிவதில்லையே, ஏன்?

தி. ருத்ரவீணா, 8ஆம் வகுப்பு, சேரன் வித்யாலயா, சின்னாளபட்டி, திண்டுக்கல்
.

பூமி தன்னைதானே சுற்றுகிறது. அதனால்தான் இரவு பகல் வருகிறது அல்லவா? அவ்வாறு சுற்றும்போது கிழக்கில் தென்படும் சூரியன் உச்சிக்குச் சென்று மறுபடி மேற்கே தலை சாய்வது போல நமக்குக் காட்சிப்படுகிறது. அதுபோல மாலையில் கிழக்கே உதிக்கும் விண்மீன் மெல்லமெல்ல தலைக்கு மேலே வந்து மறுபடி மேற்கே மறைந்து போகும். இது தினமும் காணும் காட்சி. இது தவிர உற்று நோக்கினால் வேறு ஒரு சிறப்புப் பண்பை காணலாம். இன்று இரவு சரியாக ஒன்பது மணிக்கு வானத்தைக் கூர்ந்து பார். சரியாக தலைக்கு உச்சில் உள்ள விண்மீனைக் குறித்துக்கொள். அடுத்த நாள் அதே இடத்துக்கு வா. அதே விண்மீன் உனது தலைக்கு மேலே நான்கு நிமிடம் முன்பாக அதாவது 8:56 மணிக்குக் கடந்து சென்று இருக்கும். அதற்கு அடுத்த இரண்டாம் நாள் மறுபடி நான்கு நிமிடம் முன்பாக, அதாவது 8:52 மணிக்கு அந்த விண்மீன் தலைக்கு நேராக வந்து கடந்து போகும். மூன்றாம் நாள் இரவு 8:48 மணி என ஒவ்வொரு நாளும் தலைக்கு மேலே நான்கு நிமிடம் முன்னதாகக் கடந்து போகும். சரியாக ஒரு வருடம் கழித்து அதே விண்மீன் சரியாக இரவு ஒன்பது மணிக்கு நமது தலைக்கு மேலே கடந்து செல்லும். இது ஏன் ஏற்படுகிறது? பூமி சூரியனை சுற்றுகிறது அல்லவா. எனவே வானில் இன்று உள்ள நிலையிலிருந்து சரியாக சூரியனுக்கு எதிர்ப்புறம் ஆறு மாதம் கழித்து நிலைகொள்ளும். இன்று சூரியனுக்கு எதிர்த்திசையில் தலைக்கு மேலே தென்படும் விண்மீன் ஆறு மாதம் கடந்த பின்னர் சூரியனின் திசையில் காணப்படும். பூமியின் சுழற்சி மற்றும் சூரியனைச் சுற்றிவரும் போக்கு என இரண்டு இயக்கங்களின் காரணமாக விண்மீன் நிலை ஒவ்வொருநாளும் மாறி மாறி வருவது போலத் தென்படும்.






      Dinamalar
      Follow us