
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
1. சூரிய ஒளியில் எத்தனை நிறங்கள் இருக்கின்றன? அதில் எந்த நிறம் செடிகள் வளர உதவும்?
யுவஸ்ரீ, 9ஆம் வகுப்பு, விஸ்வக்சேனா வித்யா விகாஸ் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.
இந்தப் பிரபஞ்சத்தில் எவ்வளவு நிறங்கள் உள்ளனவோ அவ்வளவு நிறங்களும் சூரிய ஒளியில் உள்ளன. இயற்பியல் பார்வையில் நிறம் என்பது மின்காந்த அலையின் நீளம் அல்லது அதிர்வெண். எனவே, ஒவ்வொரு அலைநீளமும் ஒவ்வொரு நிறம்தான். சூரிய ஒளியில் இருக்கும் மின்காந்த அலைகளில் எல்லா அலைநீளங்களும் உள்ளன.
ஆகவே, தாவரங்கள் வளர சூரியனின் நிறங்கள் தேவையில்லை, ஒளி போதும். ஒளிச்சேர்க்கை (Photosynthesis) மூலமாகவே தாவரங்கள் வளரவும் பரவவும் செய்கின்றன. ஒளிச்சேர்க்கை வினையில், தகுந்த அலைநீளமுள்ள சூரியக்கதிரை உறிஞ்சி வெளியிடும் பணியை தாவரங்களில் இருக்கும் நிறமி பச்சையம் பார்த்துக்கொள்ளும். நீரில் மூழ்கி இருக்கும் தாவரங்கள்கூட, சூரிய ஒளி வந்த பிறகே சுத்தமான ஆக்சிஜனை நீர்க்குமிழியாக வெளியிடும். அதுமட்டுமன்றி தாவரங்கள் சூரிய ஒளியைக் கொண்டே, வளர்வதற்காகத் தான் உறிஞ்சும் கார்பன் டை ஆக்ஸைடில் உள்ள கார்பனை எடுத்துக் கொண்டு, ஆக்சிஜனைப் பிரித்து வெளிவிடுகின்றன.
2. கடிகாரம் நொடிக்கு நொடி எப்படித் துல்லியமாக இயங்குகிறது?
ப. கரண் சபரீஷ், சாய் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, மடிப்பாக்கம், சென்னை.
* சங்கிலியில் 1, 2, 3 என இலக்கங்கள் குறிக்கப்பட்டிருக்கும் சங்கிலிக் கடிகாரம்
* எண்களுடன் பெண்டுலம் இருக்கும் பழமையான சுவர்க் கடிகாரமான லாங்கேஸ் கடிகாரம்
* பெண்டுலத்துக்குப் பதில் குயில் திறந்து கூவும் குயில் கடிகாரம் என பல்வேறு கடிகாரங்கள் பயன்பாட்டில் இருந்தன.
சாவி கொடுக்கும் கடிகாரத்தின் உள்ளே சுருள் (Spring) இருக்கும். சாவி கொடுக்கும்போது அந்தச் சுருள் சுருங்கிக்கொள்ளும். மெல்ல மெல்ல விரிவடையும்போது, அதன் இயக்கம் கடிகார முள்ளைச் சீராக உந்தும். இதன் காரணமாக முள் சீரான வட்ட இயக்கத்தில் செல்லும்.
தற்போதுள்ள நவீன எலெக்ட்ரானிக், மின்னணு கடிகாரங்கள் குவார்ட்ஸ் கிரிஸ்டல்களின் துடிப்பு உதவியுடன் இயங்குகின்றன. மின்சக்தி பெறும்போது, கிரிஸ்டல்கள் ஒரு நொடிக்கு 32,768 முறைகள் துடிக்கும். அதை மைக்ரோ பிராசசர் உதவியுடன் கட்டுப்படுத்தி நொடிக்கு ஒரு துடிப்பு எனச் சரிபார்த்து அமைக்கப்படும். மின்சக்தியைத் துடிப்பாக மாற்றும் கிரிஸ்டலின் தன்மைக்கு பிசோ மின்சாரம் (Piezo electricity) என்று பெயர். இதுதான் கடிகாரத்தின் மிகத் துல்லியமான இயக்கத்துக்குக் காரணமாக இருந்து நேரத்தையும் காலத்தையும் அறிந்துகொள்ள உதவுகிறது.
3. மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் இரும்பினால் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதன் மீது மின்சாரம் பாய்வதில்லை, ஏன்?
ச. சக்திவேல், திருப்பூர்.
மின்னாக்கி (Generator - ஜெனரேட்டர்) என்பது, இயக்க ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் ஒரு கருவி. இது மின்காந்தத் தூண்டலால் இயங்குகிறது. இதில் பெரியதும், சக்தி வாய்ந்ததுமான காந்தம் உள்ளது. இதனைப் 'புலக் காந்தம்' (Field Magnet) என்பார்கள். இது இரண்டு உலோக வளையங்களால் இணைக்கப்பட்டிருக்கும்.
இதில், மின்சாரத்தை எடுத்துச் செல்லும் கம்பிகள், கார்பன் துண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். செப்புக் கம்பிகளால் செய்யப்பட்ட அந்தக் கம்பி, காந்தத்தின் இரு முனைகளுக்கு இடையே சுழலும்போது, மின் காந்தத் தூண்டல் ஏற்பட்டு மின்சாரம் உற்பத்தியாகிறது.
இப்படி உருவாகும் மின்சாரம், அந்தக் கருவியைச் சுற்றி உள்ள இரும்பு போன்ற உலோகங்களில் பாயாமல் இருக்க, மின்காப்பு வயர்கள் இருக்கும். எனவேதான், மின்சாரம் வெளியே பாய்வது இல்லை. சில சமயம் இந்த மின்காப்பு தேய்ந்து, மின்சாரம் பாய வாய்ப்பிருக்கிறது. இதற்காகவே மோட்டார் பம்ப், ஜெனரேட்டர் போன்ற கருவிகள் மின் தடை பெறுவதற்காக, நிலத்தில் (Earth) இணைப்புக் கொடுக்கப்பட்டிருக்கும்.

