PUBLISHED ON : ஜூலை 04, 2016

ஒரு நாளின் ஆரம்பத்தை உற்சாகமாக மாற்றுவது குளியல். அப்படி உற்சாகம் தருகிற சோப்பை யாரு கண்டுபிடிச்சது தெரியுமா? உடனே, சோப்பை யாரு தொலைச்சதுன்னு கேட்கக்கூடாது. ;)
சோப்பைப் பத்திப் பேச என்ன இருக்குன்னு நீங்க நினைக்கலாம்! சோப்பு நாம் அன்றாடம் பயன்படுத்துகிற பொருள்களில் தவறாமல் இடம் பிடிக்கும் பொருள். குளியல் சோப்பு, முகம் கழுவும் சோப்பு, கை கழுவும் சோப்பு, துணி துவைக்கும் சோப்பு இப்படிப் பல வகையான சோப்புகள் இருக்கு! சோப்புகள் நம்மைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும், கிருமிகளிடமிருந்த பாதுகாக்கவும் செய்கின்றன. ஆனா, விளம்பரங்களில் காட்டுவதைப் போல 100 சதவீதம் செய்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆரம்ப காலத்தில் துவைக்கவும், குளிக்கவும் ஒரே வகை சோப்புதான்! மனிதர்கள் குளிப்பதற்காகத் தனியாக மென்மையான சோப்புகள் தயாரிக்கும் பணி 16-ஆம் நூற்றாண்டில்தான் தொடங்கியது. இதில் விலங்குகளின் கொழுப்புக்கு பதிலாக ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் போன்றவை பயன்படுத்தப்பட்டன.
உலகில் அனைத்து நாடுகளிலும் உள்ள மக்களை சோப்பு சென்றடையக் காரணமாக இருந்தவர்கள், வில்லியம் லீவர் (William Lever), ஜேம்ஸ் லீவர் (James Lever) என்ற இரு சகோதரர்கள். இவர்கள் தொடங்கிய லீவர் பிரதர்ஸ் (Lever Brothers) நிறுவனம் சோப்புகளை உலகம் முழுவதும் சந்தைப்படுத்தியது.
ஆரம்ப காலத்தில் தயாரிக்கப்பட்ட சோப்புகள் தரையையும், ஆடைகளையும் மட்டுமே சுத்தம் செய்யப் பயன்பட்டன. அதன் பிறகுதான் குளியல் சோப்பு அறிமுகம் ஆனது.
தரமான சோப்புகளைக் குறைந்த விலையில் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை 'வில்லியம் கோசேஜ்' (William Gossage) என்பவர் கண்டறிந்து அறிமுகம் செய்தார். இதன் பிறகுதான் சோப்புகளை ஐரோப்பிய யூனியன், அமெரிக்க நாடுகளில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த 'ஆன்ட்ரூ பியர்ஸ்' (Andrew Pears) என்பவர் 1789-ல், எளிமையான தொழில்நுட்பத்தில் நறுமணத்துடன் கூடிய மென்சோப்புகளை தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தார். இவரது மருமகன் 'தாமஸ் ஜேம்ஸ் பாரட்' (Thomas James Barratt) லண்டன் மாநகரில் உள்ள 'ஐஸ்ல்ஒர்த்' (Isleworth) என்ற இடத்தில் 1862-ல் 'Pears' என்ற சோப்பு நிறுவனத்தை தொடங்கினார். இதுதான் உலகில் முதன் முதலில் வணிக நோக்கில் தொடங்கப்பட்ட சோப்பு கம்பெனி.
சோப்பு உருவான கதை: 2500+ ஆண்டுகள்: சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்கள் சோப்பு பயன்படுத்தி வருகிறார்கள். பண்டைய பாபிலோனியர்களே (தற்போதைய ஈராக்கியர்கள்) முதன் முதலில் சோப்புகளைப் பயன்படுத்தியவர்கள்.
சோப்பில் என்னவெல்லாம் இருக்கு?
பல வேதிப்பொருள்களின் கலவைதான் சோப். சோப்பின் ஒவ்வொரு மூலக்கூற்றிலும் (Molecules) நீரில் எளிதாகக் கரையும் ஹைட்ரோ கார்பன்களும், கொழுப்பு அமிலங்களும் உள்ளன. சோப்புகள் இயற்கையாக விளையும் காய்கறிக் கொழுப்புகள், தாவர எண்ணெய் இவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகின்றன.
சோப்பிற்கு ஏன் அந்தப் பெயர்?
லத்தீன் மொழிச் சொல்லான 'சபோ' (Sapo) என்பதில் இருந்து சோப் (Soap) என்ற வார்த்தை வந்தது. இத்தாலியின் ரோம் நகரில் உள்ள மவுண்ட் சபோ (Mount Sapo) என்ற மலையிலிருந்த விலங்குகளின் உடல் கொழுப்பை சோப்பு தயாரிப்பில் பயன்படுத்தியதால் 'சபோ' என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
சோப்பு எப்போது கடைகளில் கிடைக்க ஆரம்பித்தது?
பெரும்பாலான நாடுகள் 13 ஆம் நூற்றாண்டு வரை சோப்புகளை இறக்குமதி செய்தன. தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஃபிரான்சில் உள்ள 'டோலோன்' (Toulon), 'மார்செய்ல்' (Marseille) ஆகிய நகரங்களில் 15ஆ-ம் நூற்றாண்டின் இறுதியில் சோப்பு தயாரிக்கும் பணி துவங்கியது.
மெசபடோமியாவில் ஆட்சி
நடத்திய பேரரசுகளில் ஒன்று பாபிலோனியப் பேரரசு. இதன் கடைசி அரசர் நபோனிதஸ் (Nabonidus) (கி.மு.556 - கி.மு.539). இவரது ஆட்சிக்காலத்தில் அரண்மனைப் பணிப்பெண்கள், எரிந்த மரங்களின் சாம்பலைப் பயன்படுத்தி சலவைக்கற்களின் (மார்பிள் / Marble) மீது படிந்திருந்த கறைகளைச் சுத்தம் செய்தனர். ஒருநாள் தற்செயலாக இதைப் பார்த்த அரசர் நபோனிதஸ் இது குறித்து தன் அரண்மனை வேதியியல் அறிஞர்களிடம் விவாதம் செய்தார். இதுதான் சோப்பு கண்டுபிடிப்பிற்குக் காரணமானது.
பாபிலோனிய வேதியலாளர்கள் சோப்பைக் கண்டுபிடிக்க பல ஆய்வுகள் செய்தனர். மரச் சாம்பல், விலங்குக் கொழுப்பிலிருந்து கிடைக்கும் எண்ணெய், மெழுகு, உப்பு இவற்றுடன் தண்ணீரைக் கலந்து 'காரக் கரைசல்' (அல்கலி / Alkali) உருவாக்கப்பட்டது. இந்தக் கரைசலை கொதிக்க வைத்து இறுகச் செய்தார்கள். இறுகியதும் அவற்றை சிறு துண்டுகளாக வெட்டினார்கள். இதுதான் முதலில் தயாரிக்கப்பட்ட 'சவர்க்காரம்' (சோப் / Soap).
சோப்போட கதையைச் சுருக்கமாத் தெரிஞ்சுகிட்டீங்களா? இனிமே சோப்பு உறையைப் பிரிக்கும்போது அதில் என்ெனன்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன, எந்த நிறுவனம் தயாரித்திருக்கிறது போன்ற விஷயங்களையும் படிச்சுத் தெரிஞ்சுக்கோங்க!
