PUBLISHED ON : மார் 18, 2019

உலகில் மனிதர்கள் மட்டுமல்ல; வன விலங்குகளுக்கும் இடமுண்டு. இருவருக்குமிடையில், மோதல்கள் இல்லாமல் வாழ முடியுமா? முயற்சித்தால் முடியும். இதை உலகிலுள்ள பல்வேறு வன ஆராய்ச்சியாளர்கள் தம் ஆய்வுகள் மூலம் சாதித்துள்ளனர்.
டாக்டர் லூசி.இ. கிங் (Lucy E. King) என்பவர், ஆப்பிரிக்காவின் சோமாலியா பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு சிறுவயது முதலே பல ஊர்களுக்குப் பயணம் செய்வது பிடிக்கும். அதனால் பள்ளிப்படிப்பு முடித்தவுடன், ஓராண்டு இடைவெளிவிட்டார். அப்போது கென்யா, இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்தார். பயணத்தின் மூலம் அடுத்து என்ன படிக்க வேண்டும் என்ற தெளிவு அவருக்குக் கிடைத்தது. ஆப்பிரிக்கா இவரது தாயகம் என்பதால், இயல்பாகவே காடுகளையும், யானைகளையும் அதிகம் நேசித்தார். உயிரியல் பட்டப்படிப்பு முடித்ததும், அங்கிருக்கும் பல விலங்கியல் பூங்காக்களில் வேலை செய்தார்.
லூசி, வனவிலங்கு நடத்தைகள் குறித்து ஆய்வுசெய்ய விரும்பினார். அவருக்கு மிகவும் பிடித்த யானை தான் ஆய்வுப் பொருள். இன்று, யானைகளை விரட்ட பல புதிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. ஆனால், அவை அனைத்தும் யானைகளை காப்பவை அல்ல. இதை ஆராய்ந்த லூசி, யானைகளைப் பாதுகாக்க நினைத்தார். மேலும் அவை, மனிதர்கள் வாழ்விடங்களில் நுழையாமல் தடுக்க, வன்முறையற்ற மாற்று முயற்சிகளைத் தேடினார்.
யானைகளின் நடத்தைகள் மூலம், அவருடைய ஆராய்ச்சிக்கு சிறிய துப்புக் கிடைத்தது. அக்கேசியா வகை மரங்கள் யானைகள் விரும்பி உண்ணும் தாவரங்களில் ஒன்று. யானைகள் அம்மரத்தின் அருகே வந்தபோது, தேனீக்களின் இரைச்சலைக் கேட்டு, அவ்விடத்தை விட்டு விலகிச் சென்றன.
தேனீக்களின் மூலம் யானைகளை விரட்ட முடியுமா?
தேனீக்களின் இரைச்சல் யானைகளுக்கு எப்போதுமே பிடிக்காது; தேனீக்கள் இருக்கும் பாதையை முடிந்தவரை தவிர்த்துவிடுவது யானைகளின் வழக்கம்.
தேனீக்கள் மூலம், இயற்கை முறையில் யானைகளை விரட்டத் தீர்வு கண்டுபிடித்தார் லூசி. விவசாய நிலங்களில் தேனீக்களின் மூலம், இயற்கை வேலிகளை அமைத்தார். ஆப்பிரிக்காவில் விவசாயிகளை நேரடியாகச் சந்தித்து, இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
சுமார் 9 நாடுகளில் தேனீ வேலி, நடைமுறையில் உள்ளது. ஆசியாவில் இலங்கை, தாய்லாந்து நாடுகளில் தேனீ வேலி பெருமளவு செயற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் கேரளத்தின் வயநாட்டிலும், அசாமிலும் தேனீ வேலி முயற்சிகள் சிறிய அளவில் தொடங்கியுள்ளன.
