PUBLISHED ON : ஏப் 04, 2016
சங்கர்: என்னடா சோகமா இருக்கே?
முன்னா : அம்மா என்னை 'இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்கே'ன்னு சொல்லிட்டாங்க... குரங்கு இஞ்சி தின்னுமா?
ச : குரங்கு இஞ்சி தின்னுமான்னு தெரியாது. ஆனா, நாம சாப்பிடுவோம்.
மு : இல்ல நான் சாப்பிட்டதே இல்ல…
ச : ஏன்டா இஞ்சி முறப்பா கூடவா சாப்பிட்டதில்ல?
மு : அது சாப்பிட்டுருக்கேனே.
ச : ஆங்... உன்ன அம்மா திட்டினதுல தப்பில்ல. இஞ்சி ரொம்பக் காரமா இருக்கறதால அதைத் தனியா சாப்பிட முடியாது. அதனாலதான் மசாலா அரைக்கும்போது கலந்துக்குவாங்க.
மு : அப்படின்னா இஞ்சி காயா? அது பழுத்தா என்ன ஆகும்?
ச : நல்ல கேள்வி. இஞ்சி காய் கிடையாது. செடியோட வேர்ல இருந்து கிழங்கா உருவாகி வருது. இஞ்சி காஞ்சதுன்னா சுக்கா மாறிடும். சுக்கு அருமையான மருந்துப் பொருள். திரிகடுகம்னு சொல்றதுல சுக்கு, மிளகு, திப்பிலின்னு மூணும் அடக்கம். திரிகடுகம்னா மூணு மருந்துப் பொருள்னு அர்த்தம்.
மு : அதான் பேருலயே திரின்னு இருக்கா! கடுகம்னா கடுகு இல்லயா?
ச : நல்ல சந்தேகம்டா. இன்னா நாற்பது, ஏலாதி உட்பட வர்ற பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள்ல திரிகடுகமும் ஒண்ணு. ஒவ்வொரு பாட்டுலயும் வாழ்க்கைக்குத் தேவைப்படுற மூணு கருத்துகள் இருக்குது.
மு : ஆஹா! நான் அஞ்சி ஓடுறதுக்குள்ள இஞ்சி பத்தி முழுசா சொல்லிடு.
ச : இஞ்சின்னா கோட்டை மதில் சுவர்ன்னு ஒரு அர்த்தம் இருக்கு.
மு : ரொம்ப நல்லதுடா... உடனே போயி ஒரு இஞ்சி முறப்பா சாப்பிடறேன். அப்பதான் நீ சொன்ன விஷயமெல்லாம் எனக்குள்ள சீரணம் ஆகும்.
ச : அடடே... இஞ்சி சீரணத்துக்கு உதவும்னு உனக்குத் தெரிஞ்சிருக்கே...
