PUBLISHED ON : செப் 02, 2019
கட்டுப்பாட்டுடன் கூடிய காட்டுத்தீ (controlled forest fires)
சமீப காலங்களில் பழங்குடியினரின் பழக்கவழக்கங்களிலிருந்து பாடம் கற்ற அரசுகள், கட்டுப்பாடாக நெருப்பை எரிக்கும் உத்தியை பயன்படுத்துகின்றன. இந்த முறையில், பேரழிவை ஏற்படுத்தாதவாறு தீ கட்டுப்பாட்டுக்குள் எரிக்கப்படுகிறது. காட்டுத்தீ ஏற்பட வாய்ப்பில்லாத காலத்தில், சிறிய அளவில் நெருப்பு வைக்கப்படுகிறது. இந்த நெருப்பு மெல்லப் பரவுகிறது; இளஞ்சுடராக எரிகிறது; மரங்களைச் சேதப்படுத்தாமல் செடி செத்தைகளை மட்டுமே எரித்து சாம்பலாக்குகிறது. பின் மாலைநேர பனித்துளிகள் இவற்றை அணைத்து விடுகின்றன. இப்படி கட்டுப்படுத்தப்பட்ட எரித்தல் என்பது, பயனற்ற களைகள் வேகமாக வளர்ந்து மண்டிவிடாமல் தடுக்கிறது. அந்தந்த நாட்டுக்கே உரிய விலங்குகளைப் பாதுகாப்பதற்கும், பல்வகை வாழிடங்களைப் பேணிக் காப்பதற்கும் இம்முறை உதவுகிறது.
தெரியுமா?
1. விதைகள் முளைப்பதற்கு சில தாவரங்கள் நெருப்பையே சார்ந்திருப்பதாகத் தெரிகிறது. சில விதைகளின் மேல் ஓடு மிகக் கெட்டியாக இருப்பதால் அவை உடைந்து ஈரம் உள்ளே செல்வதற்கு நெருப்பு தேவைப்படுகிறது. நெருப்பு கக்கும் புகையும்கூட விதை முளைக்க கைகொடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. புகையில் உள்ள சுமார் 70 ஆக்கக்கூறுகள் விதை முளைக்க உதவுபவையாக இருக்கலாம் என கருதப்படுகிறது; நைட்ரஜன் டையாக்ஸைடு அவற்றில் முக்கியமானதாகும்.
2. நெருப்பு எரிந்து ஓய்ந்தவுடன் நிலத்தின் நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் நிறைந்திருக்கும். செடி செத்தைகளில் இருக்கும் சத்துகளை நெருப்பு வெளியே கொண்டு வருகிறது. நிலத்தின் மீது சூரிய ஒளி விழுவதற்கு இடமளிக்கிறது, புதிய தாவரங்கள் தழைக்க வழிசெய்யும் விதைப் படுகையை உருவாக்குகிறது. அந்தத் தோதான சூழ்நிலையில் பெரும்பாலும் தாவரங்கள் செழித்து வளர்கின்றன.
3. ஏராளமான விலங்குகள் நெருப்பு அடங்கிய பின் நன்மையடைகின்றன. கங்காரு மற்றும் வல்லபி என்னும் சிறிய வகை கங்காருவின் சில இனங்கள், அடிக்கடி எரிக்கப்படும் காட்டில் வாழ விரும்புகின்றன; அவை நெருப்பைச் சார்ந்தே வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. ஏனெனில், உணவுக்காகவும் உறைவிடத்திற்காகவும் அவை சார்ந்திருக்கும் தாவரங்கள், ஒரேடியாக மடிந்துவிடாமல் மீண்டும் தோன்றி தழைத்திருக்க நெருப்பையே சார்ந்திருக்கின்றன
- ஆசிஃபா

