PUBLISHED ON : மார் 12, 2018

எல்லாத் துறைகளிலும் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் சாதக, பாதகங்களை நாம் அனுபவித்து வருகிறோம். 'தொழில்நுட்ப வளர்ச்சியால் அதிகம் விளைவது நன்மையா? தீமையா?' என்ற தலைப்பில் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் தொழில்நுட்ப எழுத்தாளர் ஷானுடன் கலந்துரையாடினார்கள்.
ஷான்
தொழில்நுட்பம்னா நாம இணையம், அலைபேசி இதைத்தான் முதல்ல நினைக்கறோம். விவசாயம், போக்குவரத்து, மின்சக்தி, தொழிற்சாலைகள் இப்படிப் பல விஷயத்துலயும் தொழில்நுட்பம் இருக்கு. இது ஒரு பெரிய துறை. முதல் முதல்ல மனிதன் கண்டுபிடிச்ச தொழில்நுட்பம் நெருப்புதான். அதிலயிருந்து ஒவ்வொண்ணா வளர்ச்சி அடைஞ்சிட்டே வந்திருக்கோம். அடுத்தபடியா சக்கரம் கண்டுபிடிச்சது. தொழில்நுட்ப வளர்ச்சி நிறைய நன்மைகளைக் கொடுத்திருக்கற அதேசமயம், தீமைகளையும் தந்திருக்கு. தொழில்நுட்ப வளர்ச்சியால ஏற்படற நன்மை, தீமைகள் பற்றி நீங்க சொல்லுங்க…
அ.ஷபி லூர்து பாஸ்கல், 9ஆம் வகுப்பு
நாணயத்தோட இரண்டு பக்கங்களைப்போல தொழில்நுட்பத்தால நன்மை, தீமை இரண்டுமே இருக்கு. கல்வியைப் பொறுத்த வரையில, பல வளர்ச்சிகளைத் தொழில்நுட்பம் தந்திருக்கு. அந்த ஆற்றலை நாம முறையாப் பயன்படுத்திக்கணும்.
இர.மதிரக் ஷினி, 9ஆம் வகுப்பு
டெக்னாலஜி வளர்ச்சியில முக்கியமானது இணையமும், போனும்தான். இது ரெண்டும் நம்ம வாழ்க்கை முறைய ரொம்ப மாத்திருச்சு. வீட்டுல ஒருத்தரோட ஒருத்தர் பேசறதைக் குறைத்து நம்மைத் தனிமைப்படுத்தியிருக்கு. குடும்ப உறவுகளில் பெரிய இடைவெளிய இது ஏற்படுத்தியிருக்கு. இதுதான் தொழில்நுட்பத்தோட மிகப்பெரிய தீமை.
இரா.சௌந்தர்யா, 8ஆம் வகுப்பு
இயந்திரத்தைப் பயன்படுத்தாம நம்ம வாழ்க்கை நடக்கறதில்ல. இது தவிர்க்கவே முடியாதது. எல்லா விஷயத்திலயும் நன்மை, தீமை இருக்கத்தான் செய்யுது. நாம கூடுமான வரைக்கும் நல்ல விஷயங்களுக்காக தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தணும்.
நா.திவ்யேஷ்குமார், 7ஆம் வகுப்பு
தொழில்நுட்ப வளர்ச்சி என்பதைவிட அறிவியல் வளர்ச்சி அப்படின்னு எடுத்துக்கலாம். தொழில்நுட்பம் வளர வளர கூடவே அதனால வர்ற சூழல் சீர்கேடுகளும் அதிகரிச்சுட்டே வருது. வளர்ச்சியப் பயன்படுத்திக்கற நாம, அதனால ஏற்படுற கெடுதல்களுக்கு என்ன தீர்வு இருக்குங்கறதைப் பத்தி யோசிச்சு செயல்படணும்.
சு.சா.அபிலாஷ், 8ஆம் வகுப்பு
வளர்ச்சிகள் உருவாகும்போது, தீமைகள் வரத்தான் செய்யும். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால நாம ரசாயன உரங்கள பயன்படுத்தறோம். இது நம்மோட எதிர்காலத் தலைமுறைக்கு கேடு விளைவிக்கும். வளர்ச்சியைத் சிந்திக்கும்போதே அதனால ஏற்படற கெடுதல்களை எப்படிக் குறைக்கலாம்னு நினைச்சோம்னா தீமைகளைத் தவிர்க்கலாம்.
மா.வசந்த், 8ஆம் வகுப்பு
கல்வியே இன்னைக்கு தொழில்நுட்பமா மாறிடுச்சு. அது மாணவர்கள இயந்திரத்தனமா ஆக்கிடுது. எவ்வளவோ யோசிச்சு ஒரு வளர்ச்சியை உருவாக்கற நம்மால, கெடுதல் இல்லாத வகையில தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஆக்க நிச்சயமா முடியும்.
ஷான்
வளர்ச்சியை ஆக்கப்பூர்வ முயற்சிக்குப் பயன்படுத்தினா அதனால ஏற்படற தீமைகளைத் தவிர்க்கலாம். தொழில்நுட்ப வளர்ச்சி நம்ம வாழ்க்கை முறைய எளிதாக்கலாம். அதுக்காக நாம அதனோட போக்குல போய் நம்மை மாத்திக்கக்கூடாது. ஆயுதம், மருத்துவம் இப்படிப் பல தொழில்நுட்ப வளர்ச்சிகள் போர் மூலமாதான் நமக்குக் கிடைச்சது.வேலைகளை துல்லியமா, வேகமா செய்துமுடிக்கத் தொழில்நுட்பம் உதவுது. தொழில்நுட்ப வளர்ச்சிய ஒவ்வொரு தனிமனிதனும் பொறுப்புணர்ச்சியோட முறையா பயன்படுத்தி, அதன் மூலமாக வர்ற தீமைகளைத் தவிர்க்க முயற்சி செய்யணும்.

