
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
14.3.1879 - 18.4.1955
ஜெர்மனி
ஐந்தாவது வயதில், காந்தத் திசை காட்டும் கருவி ஒன்றை, தந்தை அவனுக்குப் பரிசாகக் கொடுத்தார். அந்தக் கருவி விநோதமாகவும் சிந்தனையைத் தூண்டும் விதமாகவும் இருந்தது. அதை நாலா பக்கமும் சுற்றிச் சுழற்றிப் பார்த்தான். எந்தத் திசையில் திருப்பினாலும் காந்த ஊசி வடக்குத் திசையை மட்டுமே காட்டியது. சுற்றி இருக்கும் ஏதோவொரு சக்தி அதை இயக்குவதாக நினைத்துக்கொண்டான். பூமி வெற்றிடமாக இருக்கும்போது, காந்த ஊசியை எது இயக்குகிறது என்பதில் தொடங்கி, அண்டவெளி, ஈர்ப்பு விசை என அவனை இழுத்துச் சென்றது திசை காட்டும் கருவி. அந்தச் சிறுவன்தான் பின்னாளில் இயற்பியல் உலகின் ஒப்பற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டீன்!
மூன்று வயதுவரை பேச்சு வரவில்லை. கற்றல் குறைபாடுகளுடன் மந்தமாக இருந்தான். எந்த விளையாட்டிலும் கலந்து கொள்வதில்லை. சிந்திப்பவை அனைத்தையும் படங்களாகவும் காட்சிகளாகவும் மனத்தில் நிறுத்திக் கொள்வான். ஆசிரியர்கள் அனைவரும் கோபம் கொள்ளும் வகையில் எல்லா வேலைகளையும் மெதுவாகவே செய்து முடித்தான். இதனால், 'இவன் உருப்படுவது கடினம்' என்று ஆசிரியர்களும் ஒதுங்கினார்கள்.
உறவினர் ஒருவர் கணிதம், அறிவியல் கற்பித்ததோடு, பல நூல்களையும் படிக்கச் சொன்னார். கணிதம், அறிவியலில் அதிக ஆர்வம் கொண்டு, சுவிஸ் ஃபெடரல் பாலிடெக்னிக் கல்லூரியில் படிப்பை முடித்தார். பின்பு, காப்புரிமை அலுவலகத்தில் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்யும் வேலை கிடைத்தது. அதுதான் ஆராய்ச்சிகளில் ஈடுபட அவருக்கு உந்துதலாக அமைந்தது.
தொடர்ந்து, இயந்திரவியல், அணுக்கள், ஒளிமின் விளைவு, ஈர்ப்பு விசை உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். நியூட்டன் விதிகளை ஆராய்ந்து, அறிவியல் உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் சார்பியல் கோட்பாடுகளைக் கூறினார். ஒளிமின் விளைவைக் கண்டறிந்ததற்காகவும், கோட்பாட்டு இயற்பியலின் பங்களிப்புக்காகவும் 1921இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதகுலத்தின் நன்மைக்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஐன்ஸ்டீனின் ஆழமான சிந்தனையும், தெரியாததைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் நமக்கு இருந்தால், இந்தப் பிரபஞ்சத்தில் ஒளிந்திருக்கும் பல விஷயங்களை நாமும் கண்டறியலாம்!

