தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நன்மை சூழ் உலகு

நன்மை சூழ் உலகு

நன்மை சூழ் உலகு


PUBLISHED ON : பிப் 06, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 06, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பூமியைச் சூழ்ந்து காணப்படும் மண், நீர், வளி, சூரிய வெப்பம் போன்றவை உயிர் மற்றும் உயிரற்ற காரணிகளை உள்ளடக்கியது. இவை அனைத்தையும் உள்ளடக்கிய உயிரின மண்டலமே, சூழல் மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. உயிர், உயிரற்ற காரணிகளுக்கு இடையில் ஏற்படுகிற தொடர்ச்சியான சூழல் வெளிப்பாடுகள் சூழல் தொகுதி எனப்படும். இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மனிதனின் தேவைகள் அதிகரித்துக்கொண்டே போவதால், நகர மயமாக்கல், இயந்திர மயமாக்கல் போன்றவற்றில் வளர்ச்சிகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக சூழல் தொகுதியில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. மாற்றங்களின் விளைவாக சூழலியல் சீர்கேடுகள் ஏற்படுகின்றன. மண், வளி மண்டலம், நீர், சூரியக் கதிர்வீச்சு போன்றவை சூழல் தொகுதியின் முக்கியமான பகுதிகள்.

மண்

மண் என்பது சிதைந்த பாறைத் துகள்கள், அதிக மாற்றமடைந்த கனிமத் துகள்கள், உயிர்ச் சத்துகள், உயிரினங்கள் போன்றவற்றைக் கொண்டிருக்கும் கலவை. உயிரினங்களுக்குத் தேவையான சத்துகளையும், நீரையும் அளிக்கும் ஆதாரமாக மண் உள்ளது. மண்ணில் வளரும் தாவரங்கள், உயிரினங்கள் சூழ்தொகுதியின் ஒரு பாகமான மண்ணுடன் சத்துச் சுழற்சி மூலமாகப் பிணைக்கப்பட்டுள்ளன.

மண் மாசுபடுதல்

நிலத்தில் கலக்கும் ஆலைக் கழிவுகளும் செயற்கை உரங்களும் மண்ணை மாசுபடுத்துகின்றன. மண்ணுடன் தொடர்புள்ள தாவரங்கள் நச்சுத்தன்மை அடைவதால், அதனை உட்கொள்ளும் உயிரினங்களும் பாதிப்படைகின்றன.

வளி மண்டலம்

தாவரங்கள், உயிரினங்களுக்குத் தேவையான கார்பன்டை ஆக்சைடு, ஆக்சிஜன் போன்றவற்றை வளி மண்டலம் அளிக்கிறது. வளி மண்டலத்துக்கும், புவியின் மேற்பரப்புக்கும் இடையே நீராவியாதல், மழைப் பொழிவு போன்ற தொடர்ச்சியான செயல்பாடுகளால் நீர் சுழற்சி நிகழ்கிறது.

வளி மாசுபடுதல்

வாகனப்புகை, தொழிற்சாலைப் புகை, குப்பைகள் எரித்தல் போன்றவை மூலமாக வெளியேறும் கரியமில வாயு, காற்றில் கலந்து வளி மண்டலத்தைப் பாதிக்கிறது. இதனால் ஓசோன் படலம் சிதைவு, சுவாசக் கோளாறுகள், புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

நீர்

உயிரினங்களின் திசுக்களில் 90 சதவீதம் வரை நீர் உள்ளது. தாவரங்களுக்கும் நீர் அடிப்படைத் தேவையாக உள்ளது. உயிரினங்கள், தாவரங்களுக்குத் தேவையான சத்துகளை அளிக்கும் ஆதாரமாக நீர் உள்ளது.

நீர் மாசுபடுதல்

தொழிற்சாலைக் கழிவுகள், சாயப்பட்டறை கழிவு நீர், மின்னணுக் கழிவு, அணுக்கழிவு போன்றவை நிலத்தடி நீரை மாசுபடுத்துகின்றன.

சூரிய கதிர்வீச்சு

சூரியக் கதிர்வீச்சு வளி மண்டலத்தை வெப்பமயமாக்க, நீராவியாதல், நீராவிப் போக்கு ஆகியவற்றின் மூலம் நீரை வளி மண்டலத்தில் செலுத்தவும் உதவுகிறது. நச்சுத் தன்மை கொண்ட கதிர்கள் பூமியை வந்து சேராதபடி, ஓசோன் படலம் காக்கிறது. தாவரங்களின் ஒளிச்சேர்க்கை, வளர்சிதை மாற்றம், உயிரினங்களுக்குத் தேவைப்படும் ஆற்றல் போன்றவற்றை சூரியக் கதிர்வீச்சு அளிக்கிறது.

சூரிய கதிர்வீச்சு பாதிப்படைதல்

கதிர்வீச்சின் அளவு அதிகரிப்பதால் புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம், ஓசோன் படலச் சிதைவு போன்ற சூழல் சீர்குலைவுகள் ஏற்படுகின்றன. இது ஒட்டுமொத்த புவிச் சூழலையும் பாதிக்கிறது; மண், வளி, நீர் போன்ற அனைத்தின் சமநிலை குலைவுக்கும் இது காரணமாகிறது.

ப.கோபாலகிருஷ்ணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us