PUBLISHED ON : டிச 23, 2019

பள்ளி என்பது மாணவர்களை வேலைக்குத் தயார் செய்யும் கூடமல்ல. கல்வியுடன் மனித வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்கக் கல்வியும் இங்கே இருந்தே கிடைக்கிறது. ஏற்றத்தாழ்வுகள் தெரியக்கூடாது என்பதால் தான், பள்ளி மாணவர்களின் உடை ஒரே மாதிரி இருக்கவேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டது. மாணவர்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய, படிக்கும் விஷயங்களை தினசரி வாழ்வில் கடைப்பிடிக்கிறீர்களா? என கேட்டிருந்தோம். உளுந்தூர்பேட்டை, ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா குருகுல பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்தோம்.
ஆனந்தன், 12ஆம் வகுப்பு
பள்ளியில் நிறைய புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக் கொள்கிறேன். அதை வைத்து நான் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசப் பழகியுள்ளேன். இதனால் வெளியே பல்வேறு இடங்களுக்குச் சென்றாலும் என்னால் ஆங்கிலத்தில் எளிதில் பேச முடிகிறது.
இராகவேந்தர், 12ஆம் வகுப்பு
நேர மேலாண்மை பற்றி என் ஆசிரியர் மூலம்தான் அறிந்துகொண்டேன். நேரத்தை வீணாக்காமல், திட்டமிட்டு நேரத்தைச் செலவழிக்கிறேன். இதனால் எனக்கு அதிக நேரம் கிடைக்கிறது. அந்த நேரத்தைப் பொழுதுபோக்குக்கும், பாடங்களை மீண்டும் படித்துப் பார்க்கவும் பயன்படுத்துகிறேன். இதனால், மற்றவர்களுக்கு முன்பே எழுத, படிக்கவேண்டிய பாடங்களை முடித்து விடுகிறேன். பள்ளியில் தான் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தும் திறனையும் கற்றுக்கொண்டேன்.
சுவர்ணமித்ரா, 11ஆம் வகுப்பு
நீரின் முக்கியத்துவம் பற்றி, நான் என் பாடப் புத்தகத்தில் படித்திருக்கிறேன். நீரையும் மின்சாரத்தையும் இன்று நாம் பயன்படுத்துகிறோம் என்றாலும், அதை வீணாக்குவது என்பது எதிர்கால சந்ததியினருக்குச் செய்யும் துரோகம். எனவே, என்னுடைய தினசரி வாழ்க்கையில் நீரை அளவாகத்தான் பயன்படுத்துகிறேன். என் வீட்டாரிடமும் தோழிகளிடமும் நீரின் அவசியத்தைச் சொல்லி, அதை வீணாக்காமல் பயன்படுத்தும்படி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன்.
இராஜேஸ்வரி, 10ஆம் வகுப்பு
தமிழிலும், ஆங்கிலத்திலும் பிழை இல்லாமல் எழுதுவதற்குக் கற்றுக்கொண்டேன். நமது பண்பாடு, பாரம்பரியம், கலாசாரம், ஒழுக்கம், மூத்தோருக்கு கீழ்ப்படிவது, ஏற்றத் தாழ்வுகள் பார்க்காமல் எல்லோரிடமும் சகோதர அன்புடன் பழகுவது போன்ற பல விஷயங்களைப் பள்ளியில் கற்றுக்கொண்டு, என் வாழ்க்கையில் கடைப்பிடித்தும் வருகிறேன்.
இராதிகா, 11ஆம் வகுப்பு
பாடப் புத்தங்கங்களைத் தவிர, இன்னொரு உலகம் இருக்கிறது என்பதை எங்கள் குருகுலத்தின் நூலகம் வழியாகவே அறிந்து கொண்டேன். ஆசிரியர்கள் மூலம் கற்றுக்கொண்ட இப்பழக்கம், வீட்டில் இருக்கும்போதும் தொடர்கிறது. 'டி.வி.', ஸ்மார்ட் போன்களைவிட எனக்கு நல்ல புத்தகங்களே நிறைவைத் தருகின்றன.
சுபஸ்ரீ, 11ஆம் வகுப்பு
பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதால் வரக்கூடிய தீமைகளை நான் என் பாடப் புத்தகத்தில் படித்து இருக்கிறேன். அழிக்கவே முடியாத இந்த அரக்கனைப் பயன்படுத்துவது கேடு என்று உணர்ந்தபின், அதைப் பயன்படுத்துவதே இல்லை. எங்கள் வீட்டிலும், உறவினர் வீடுகளிலும்கூட பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தவேண்டாம் என்று நான் பலமுறை கூறியுள்ளேன். அரசும் அதற்குத் தடைவித்து, என் கருத்து உண்மை என்று காட்டியதால், உறவினர்கள் பலர் பாராட்டினார்கள்.

