PUBLISHED ON : ஏப் 14, 2025

* முடி, கெரட்டின் (Keratin) என்ற புரதத்தால் ஆனது. கெரட்டின் நகங்களிலும் விலங்குகளின் கொம்புகளிலும் காணப்படும். இந்தப் புரதம் முடியை வலிமையாக வைத்திருக்கிறது. ஒரு மனிதருடைய தலையில் ஏறத்தாழ 1,00,000 முதல் 1,50,000 முடிகள் உள்ளன.
* ஒரு மனிதருடைய தலைமுடி மாதத்திற்குச் சராசரியாக 0.5 முதல் 1.25 செ.மீ. வரை வளர்கிறது. ஆனால், இது வயது, பருவநிலை, மரபணு அடிப்படையில் மாறுபடலாம்.
* தோலுக்கு வெளியே உள்ள முடியின் பகுதி, உயிரற்றது. தோலுக்கு அடியில் உள்ள முடி வேர்களில் (Follicles) மட்டுமே உயிரணுக்கள் செயல்படுகின்றன, அங்கிருந்து முடி வளர்கிறது.
* கிட்டத்தட்ட ஒவ்வொரு முடி வேர்க்காலும் செபேசியஸ் (Sebaceous) என்னும் சுரப்பியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது எண்ணெய் சுரப்பி என்றும் அழைக்கப்படுகிறது. இது முடியைப் பளபளப்பாக வைக்கிறது.
* முடியை வெட்டும்போது வலி தெரிவதில்லை. ஏனெனில் அதில் நரம்புகள் இல்லை. ஆனால், முடியை இழுக்கும்போது தோலில் உள்ள நரம்புகள் வலியை உணர்கின்றன.
* தலைமுடி வெப்பத்தைத் தக்கவைக்கிறது, கண் இமைகள் தூசியைத் தடுக்கின்றன, மூக்கு முடி சுவாசிக்கும் காற்றை வடிகட்டுகிறது. ஒவ்வோர் இடத்திலும் முடிக்கு ஒரு தனித்துவமான பயன் உள்ளது.
* முடியின் நிறம், மெலனின் (Melanin) என்ற நிறமியைப் பொறுத்து மாறுபடும். வயதாகும்போது மெலனின் உற்பத்தி குறையும், இதனால் முடி நரைக்கிறது. சிலருக்கு மன அழுத்தமும் இதைத் துரிதப்படுத்தலாம்.
* ஒரு முடி இழை 100 கிராம் வரை எடையைத் தாங்கும். தலையில் உள்ள எல்லா முடியையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பொருளை இழுத்தால், அது பல கிலோ எடையைத் தூக்கும் திறன் கொண்டது!
* கோடைக் காலத்தில் முடி வேகமாக வளரும், ஏனெனில் வெப்பம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. குளிர்காலத்தில் இது மெதுவாகிறது.