PUBLISHED ON : ஜன 20, 2025

மரநாய் ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படுகிறது.
தவறு. மரநாய் (Weasel) ஒரு பாலூட்டி விலங்கு. இவை அன்டார்டிகா, ஆஸ்திரேலியா, அதைச் சுற்றியுள்ள தீவுகளைத் தவிர உலகெங்கும் வாழ்கின்றன. சிறிய வகை உயிரினங்களான எலி, அணில், பூனை, பாம்பு, கோழி, முயல் ஆகியவற்றைக் கொன்று உண்ணும். இவை வேட்டையாடுவதில் மிகவும் வல்லவை. மெலிந்த உடல் காரணமாக விரைவாக ஓடும். சந்துகளிலும் கூட நுழைந்து செல்லும்.
மரநாய் ஒரு முறைக்கு 4 முதல் 8 குட்டிகள் வரை ஈனும். குட்டிகளை 5 வாரங்கள் வரை மிகவும் கவனமாகப் பாதுகாக்கும். தாய்ப் பாசம் மிக்கது. குட்டிகளை ஆபத்திலிருந்து காக்க கடுமையாகப் போராடும். இவை அழுகிய மரங்களின் அடிப்பாகம், பாறைகள் உள்ளிட்டவற்றில் வாழும். பொதுவாக இவை பகலில் தூங்கி, இரவு நேரங்களில் வேட்டையாடுகின்றன.
தமிழகத்தின் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மதுக்கூர், பேராவூரணி உள்ளிட்ட இடங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. மரங்களில் விரைந்து ஏறும் ஆற்றலுடையவை. நன்றாக நீந்தவும் செய்யும். இவை இரையைக் கவரப் பலவிதமான ஒலிகளை எழுப்பக்கூடியவை.