
மக்களுக்கு உதவும் மருத்துவ ஆராய்ச்சிகள் ஒருவகை எனில், இப்படியெல்லாம் ஆராய்ச்சியா என நினைக்க வைக்கும் ஆராய்ச்சிகளும் உலகில் நடந்து வருகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
பெயர் சொன்னால் பால்!
இங்கிலாந்தில் நியூகேஸ்டில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் கேத்தரின் டக்ளஸ் மற்றும் பீட்டர் ரௌலின்சன் ஆகியோர் பசுக்களின் பால் உற்பத்தியை அதிகரிக்க முயற்சித்தனர். பத்து மாதங்களில் 7,500 லிட்டர் பாலை பசுக்கள் தந்தது என்றால், இவர்களின் ஆராய்ச்சி மூலம் 260 லிட்டர்கள் அதிகரித்தன. எப்படி?
பசுக்களுக்கு பெயர் வைத்து அழைத்ததுதான் காரணம் என்று சொல்லி, அனைவரையும் அசர வைத்தனர். கூட்டமாக மேய்ந்தால் பசுக்களின் பால் அளவு குறையும் என்று சொன்ன இவர்களின் ஆய்வு முடிவுகளைப் பார்த்து பசுக்களே சிரித்துவிட்டன.
இரவு ஆந்தை!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் பீட்டர் ஜோனாசன் அதிகாலையில் எழுபவர்கள், இரவு தூங்காமல் ஆந்தை போல வாழ்பவர்கள் ஆகியோரின் குணநலன்களை ஆராய்ந்தார். இதில் இரவு தூங்காதவர்கள், சமூகத்திற்கு எதிரான தன்மை கொண்டவர்களாக உள்ளனர். குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பதை ஆய்வு முடிவாக அறிவித்து ஷாக் கொடுத்தார். பல்கலைக்கழக மாணவர்கள் 250 பேரை ஆராய்ந்ததன் முடிவு இது. இதற்குக் காரணங்களாக, இரவில் நடைபெறும் குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டினார். அதோடு, ”வேட்டையாடுவதற்காக சிங்கம், தேள் போன்றவைகூட இரவில்தான் எழுகின்றன ” என்றும் எடுத்துக்காட்டுகளைக் கூறினார்.
இசைக்கு பலி!
இசை எங்கிருந்து பிறக்கிறது என்பது மட்டுமல்ல; இசை வாழ வைக்குமா என்பதும் விவாதத்திற்குரிய கேள்விதான். டோக்கியோவிலுள்ள ஜூன்டென்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மசாடேரு உச்சியாமா, இதுகுறித்து ஆராய்ந்தார். மாற்றிப் பொருத்தப்பட்ட இதயங்களைக் கொண்ட எலிகளை, பல நாட்கள் கிளாசிக் இசையைக் கேட்க வைத்தார். இதனால் அவை, 26, 20, 11, 7 ஆகிய நாட்கள் தாக்குப்பிடித்து உயிர்வாழ்ந்தன. இசை ஆராய்ச்சி வென்றதோ இல்லையோ, அதற்கு நான்கு எலிகள் பலியானது நிஜம்.
நெருப்பு அலாரம்!
ஜப்பானின் சுஷி உணவுடன் சேர்த்து உண்ணப்படுவது, வசாபி எனும் உணவுப் பொருள். இதில் ஐசோதை யோசயனைட் என்ற வேதிப்பொருள் உள்ளது. இதனை, ஷிகா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நெருப்பு அலாரமாகப் பயன்படுத்த முயற்சித்தனர். காது கேளாதோரிடம் நெருப்பு அலாரமாகப் பயன்படுத்தினர். நெருப்புப் பற்றினால், வசாபியின் மணம் பரவுமாறு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு மாற்றாக லாவண்டர், பெப்பர்மின்ட் வாசனைகளும் பயன்படுத்தப்பட்டன. ஆனால், வசாபியின் வாசனைக்கு நிகராக இவை வெற்றிபெறவில்லை.

