PUBLISHED ON : மே 02, 2016

கரையைத் தொட்டுவிட்டு மீண்டும் கடலுக்குத் திரும்பினால்தான் அதற்குப் பெயர் 'அலை'. அதற்கு மாறாக, நிலத்தை நோக்கி சீறிப் பாய்ந்து நிலப்பரப்பிற்கு வந்தால் அது அலை அல்ல 'ஆழிப்பேரலை' அல்லது 'சுனாமி' (Tsunami).
சுனாமி என்பது ஜப்பானிய வார்த்தை. இதற்கு 'துறைமுக அலை' என்று பொருள்.
ஜப்பானியத் துறைமுகங்களை, இந்தப் பேரலைகள் தாக்கியதால் இந்தப் பெயர்!
ஒரே ஓர் அலையால் ஏற்படுவது அல்ல சுனாமி. அடுக்கடுக்கான பல அலைகளால் உருவாகிக் கரையை நோக்கி மணிக்கு 1,000 கி.மீ. வேகத்தில் வரும். இந்த அலைகளின் வேகம் பொதுவாக ஜெட் விமானத்தின் வேகத்துக்குச் சமமாகவும், சில சமயங்களில் கூடுதலாகவும் இருக்கும்!
பௌர்ணமி (Full Moon), அமாவாசை (New Moon) ஆகிய நாட்களில் பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வருகின்றன. அப்போது பூமியின் புவிஈர்ப்பு சக்தியில் ஏற்படும் மாற்றங்களால் கடலில் கொந்தளிப்பு ஏற்படும். பூகம்பம், கடலடி நிலச்சரிவு, போன்ற காரணங்களாலும் சுனாமி ஏற்படுகிறது.
சுனாமியும் பாதுகாப்பும்
* சுனாமி வருவதற்கு முன்பாக, கடல் உள்வாங்கும்.
* சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு கிடைத்த உடன், கடலைவிட்டுத் தூரமாக, உயரமான இடங்களுக்குச் சென்றுவிட வேண்டும்.
* அலைகளை கட்டுப்படுத்தும். சதுப்பு நிலக்காடுகளையும் பெரிய கற்குவியல்களையும் கடற்கரை ஓரங்களில் அமைக்கவேண்டும்.
* சுனாமியின் தாக்கத்தை அளக்க 'ரிக்டர்' அளவுகோல் பயன்படுகிறது. அமெரிக்க நில அதிர்வு இயலாளர் 'சார்லஸ் ரிக்டர்' (Charles Richter) 1935ல் இந்த நில அளவுகளை வரையறுத்தார்.
* சாதாரண அலைகள் 5 முதல் 10 வினாடிகள் நீடிக்கும். இவற்றின் அகலம் 100 முதல் 200 மீட்டர் இருக்கும். ஆனால், 10 நிமிடம் முதல் 2 மணிநேரம் வரை நீடிக்கும் சுனாமி அலைகளின் அகலம் 500 கி.மீ. வரை இருக்கும். அதன் அகலம்தான் பெரிய பேரழிவுக்குக் காரணம்!
21ஆம் நூற்றாண்டில் தாக்கிய சுனாமிகள்
* 2004 - இந்தோனேசியா, இலங்கை, இந்தியா
* 2006 - ஜாவா தீவு
* 2007 சாலமோன் தீவுகள்
* 2010 சிலி, சுமத்ரா
* 2011 - நியூசிலாந்து, ஜப்பான்
* 2013 - சாலமோன் தீவுகள்
* 2015 - சிலி
அலாஸ்காவில் 1958ல் ஏற்பட்ட சுனாமி அலையின் உயரம், 525 மீட்டர் (அரை கி.மீ.) இது அதிபயங்கரமானது.
