PUBLISHED ON : மே 02, 2016

இலை ஆடை உடுத்தி, பச்சை மாமிசம் சாப்பிட்ட காலத்தில் இருந்து தொடங்குகிறது மனித குல வரலாறு. முதன் முதலாக ஆற்றுப் படுகைகளில் நாகரிகம் (Civilization) வளரத் தொடங்கியதால், 'நதிக்கரை நாகரிகம்' என்று அழைக்கப்படுகிறது. Civilization என்ற சொல் லத்தீன் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு, 'நகரவாசி' என்று பொருள். சில நாகரிகங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
கிரேக்க நாகரிகம் (கி.மு. 1300 - கி.மு. 1100)
இன்றைய மேற்கத்திய நாகரிகத்தின் அடிப்படை கிரேக்கம்தான் என்று வரலாற்றாளர்கள் சொல்கிறார்கள். அன்றைய கிரேக்கர்கள் வானவியல், கணிதம், புவியியல், இலக்கியம், பழக்க வழக்கங்கள், அரசியல், கலை, பொருளாதாரம் போன்றவற்றில் நாகரிகம் அடைந்து இருந்தார்கள்.
அவர்கள் ஆண்ட 200 வருட காலங்கள் 'வீரயுகம்' எனஅழைக்கப்படுகிறது. கிரேக்கப் பகுதிகளில் கரடுமுரடான மலை, ஆற்றுப் படுகைகள் அதிகம் இருந்ததால், கடல் வழிப் போக்குவரத்தில் ஈடுபட்டனர்.
கிரேக்கம் என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர் பேரரசர் அலெக்ஸாண்டர். உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளைப் பெற்ற இவர், பேரறிஞர் அரிஸ்டாட்டிலின் சீடர். கிரேக்கத்திற்கு மற்றொரு அடையாளமாகத் திகழ்ந்தவர், மாமேதை சாக்ரடீஸ்.
ரோம் நாகரிகம் (கி.மு. 753 - கி.பி. 476 )
கி.மு. 753ல், சிறிய ஊராக உருவான ரோம், அடுத்த 650 ஆண்டுகளில் பல பகுதிகள் மீது போர் தொடுத்து சாம்ராஜ்யத்தைப் பெருக்கியது.
ரோம் என்றாலே, நம் நினைவுக்கு வருபவர் ஜூலியஸ் சீஸர். கி.மு. 100 முதல் கி. மு. 44 வரை வாழந்த இவர் மாவீரர் மட்டுமல்ல, மிகச் சிறந்த எழுத்தாளரும்கூட!
ரோமானியர்களின் வாழ்க்கையில் கோவில்கள், இறை வழிபாடு ஆகியவை முக்கியமான பங்கு வகித்தன. பூசாரிகளின் முக்கியக் கடமைகளுள் ஒன்று குறிப்பேடுகள் எழுதுவது! அதற்காக, 'பாபிரஸ்' (Papyrus) என்னும் செடியில் தயாரிக்கப்பட்ட காகிதத்தைப் பயன்படுத்தினார்கள்.
கி.மு. 300ல் வெண்கல நாணயங்களையும் அதன்பிறகு, தங்கம், வெள்ளி போன்ற நாணயங்களையும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
ரோம் மன்னர் ரோமுலஸ் நாட்டை நிர்வாகம் செய்ய கமிஷா க்யூரியட்டா, செனட் என்ற இரண்டு சபைகளை உருவாக்கினார்.
ரோம்தான் இன்றைய அரசியலில் பின்பற்றப்படும் மேல் சபை, கீழ் சபை என்ற முறையை அறிமுகம் செய்தது.
நாகரிகமும் காலமும்
* கற்கால நாகரிகம் கி.மு. 8,000 முதல் 5,000 வரை
* சிந்து சமவெளி நாகரிகம் கி.மு. 3000 முதல் கி.மு. 1500
* நைல் நாகரிகம் கி.மு. 2850 முதல் கி.மு. 715
* பாபிலோனியன் நாகரிகம் கி.மு. 1728 முதல் கி.மு. 1686
