PUBLISHED ON : பிப் 04, 2019

''இந்தியா ஓர் அழகிய பல்லுயிரிய வளம் (Biodiversity Richness) மிக்க நாடு. வாழ்நாளில் ஒரு முறையாவது இந்தியா முழுமையும் சுற்றிப் பார்ப்பது மகிழ்ச்சிக்குரியது. இந்த வாய்ப்பை எனக்களித்த வண்ணத்துப்பூச்சிகளுக்கும், இந்திய நாட்டிற்கும் நன்றி'' என பேசுபவர் ஐசக் கெகிம்கர். 'இந்தியாவின் வண்ணத்துப் பூச்சி மனிதர்' என்றே இவரை அழைக்கலாம்.
ஐசக் டேவிட் கெகிம்கர் (Isaac David Kehimkar), இயற்கையாளர், புகைப்படக்காரர், ஆசிரியர். 'இந்தியாவின் வண்ணத்துப்பூச்சிகள்' என்ற நூலிற்காக, இந்தியா எங்கும் குறுக்கும் நெடுக்குமாகப் பயணம் செய்துள்ளார். அழிவின் விளிம்பில் உள்ளவை, அரிய வகை, ஓரிட வாழ்விகள் (Endemic) என பல வண்ணத்துப்பூச்சிகளை புகைப்படங்கள் எடுத்துள்ளார் ஐசக். சுமார் 1000-க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி வகைகளை புகைப்படங்களாக எடுத்து இந்த நூலில் பயன்படுத்தியுள்ளார்.
ஆரம்பத்தில், இவர் வானொலி தொகுப்பாளராக, தொலைக்காட்சி வடிவமைப்பாளராக மும்பையில் வேலை செய்து வந்தார். தனக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தில் குழந்தைகளுடன் அருகில் உள்ள காடுகளுக்குச் செல்வார். இவர் படித்ததோ அரசியல் அறிவியல். ஆனால், ஆர்வமோ இயற்கையின் மீது. அதனால், செய்துவந்த பணியை விட்டுவிட்டு முழுமையாக இயற்கையை நோக்கித் தன் தேடலை அமைத்துக்கொண்டார்.
Moth - an Introduction, Common Indian Wild Flowers, The Book of Indian Butterflies, Incredible Insects போன்ற நூல்களை எழுதியுள்ளார். வண்ணத்துப்பூச்சிகளைவிட எண்ணிக்கையில் பல மடங்கு அதிகமிருக்கும் அந்திப்பூச்சிகள் (Moth) பற்றி இந்தியளவில் ஐசக் கெகிம்கர் எழுதியுள்ள புத்தகம்தான் முக்கியமானது.
இவரது புதிய புத்தகமே 'இந்தியாவின் வண்ணத்துப்பூச்சிகள்.' இதில், சுமார் 1,000 வண்ணத்துப்பூச்சி வகைகளின் தகவல்களை அரிய ஒளிப்படங்களுடன் தொகுத்துத் தந்துள்ளார்.
அவற்றை சேகரிப்பதற்காகப் பல இடங்களுக்கும் பயணித்துள்ளார். சுந்தரவனக் காடுகள், அசாம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், மற்ற வட இந்தியப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலை, அந்தமான் தீவுகளுக்கும் சென்று வண்ணத்துப்பூச்சிகளைப் பதிவு செய்துள்ளார். சிக்கிம் பகுதிக்கு மட்டும் இந்நூலிற்காக ஐந்து முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
'அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு மருத்துவரிடமிருந்து Kaiser - i - Hind என்ற அரிய, ஓரிட வாழ்வியின் ஒளிப்படத்தைப் பெற்றது மறக்க இயலாதது' என்ற ஐசக் கெகிம்கர் தொடர்ந்து, 'சமூக வலைத்தளங்கள், இணையதளம், கணினிமயப்பட்ட ஒளிப்படக்கருவிகள் என சமீப காலங்களில் ஏற்பட்டுள்ள அறிவியல் முன்னேற்றங்கள் நூலிற்கான என்னுடைய பணியை எளிதாக்கியுள்ளன' என்றார்.
'இந்திய வண்ணத்துப்பூச்சிகள்' நூலின் பழைய பதிப்பில் சுமார் 634 வகை வண்ணத்துப்பூச்சிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. தற்போதைய செம்பதிப்பில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதுடன், கூடுதல் தகவல்களையும் சேர்த்துள்ளார்.
'சிக்கலான பணியாக இருந்தாலும், உனக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தால் சரி. உன் மனத்துக்கு சரியென்றால் செய்து பார். பணம், புகழ் எல்லாம் உன் பின்னால் வரும்' என தந்தை சொன்ன வார்த்தைகள் உந்துசக்தியாக இருப்பதை ஐசக் கெகிம்கர் நினைவு கூர்ந்து சொல்கிறார்.
-ஏ.சண்முகானந்தம்