PUBLISHED ON : நவ 11, 2019

பாலைவன நகரமான இராஜஸ்தானின் அடையாளமாக ஒட்டகங்கள் திகழ்கின்றன.
ஒட்டகங்களின் எண்ணிக்கை மெல்ல மெல்லக் குறைந்து வருவதாக சமீபத்தில் வெளியான கால்நடைக் கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
1992-ஆம் ஆண்டு 7,46,000 ஆக இருந்த ஒட்டகங்கள், தற்போது 2,13,000 ஆகக் குறைந்துவிட்டது.
இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த ஒட்டகங்களில் 85 சதவீத ஒட்டகங்கள் இராஜஸ்தானில் தான் இருக்கின்றன. குஜராத், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் குறிப்பிடத்தகுந்த அளவு ஒட்டகங்கள் உள்ளன. ஆனால், ஒட்டுமொத்தமாக ஒட்டகங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாகக் கால்நடைகளுக்கான சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கணக்கெடுப்பின்படி, குஜராத்தில் 30,000 ஒட்டகங்கள் இருந்தன. தற்போதைய கணக்கெடுப்பிலோ 21,000 ஒட்டகங்கள் மட்டுமே உள்ளன.
கடந்த ஏழு ஆண்டுகளில், ஹரியாணா மாநிலத்தில் இருந்த ஒட்டகங்களின் மொத்த எண்ணிக்கையில் 72.65 சதவீதம் சரிந்துவிட்டது. தற்போது அந்த மாநிலத்தில் வெறும் 5,000 ஒட்டகங்கள் மட்டுமே இருக்கின்றன.
உத்தரப் பிரதேச மாநிலத்திலும், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒட்டகங்களின் எண்ணிக்கையில் எழுபது சதவீதம் குறைந்துவிட்டது. தற்போது இரண்டாயிரம் ஒட்டகங்கள் மட்டுமே வாழ்கின்றன.
ஒட்டகங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்ததற்குப் பல காரணங்களை நிபுணர்கள் பட்டியல் இடுகிறார்கள்.
பாரம் சுமக்கும் வேலையை ஒட்டகங்கள் மிகச் சிறப்பாகச் செய்யும். ஒட்டகங்களின் மிக முக்கிய பயன்பாடும் இதுதான். ஆனால், காலமாற்றத்தால் இயந்திரங்கள் அந்த வேலையைச் சுலபமாகச் செய்துவிடுவதால், ஒட்டகங்களின் தேவை சுத்தமாக நின்றுவிட்டது.
நம் நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு, ஏறக்குறைய இரண்டு லட்சத்து பதினேழாயிரம் கிலோமீட்டர் தொலைவுள்ள சாலைகள் இராஜஸ்தானுடன் இணைக்கப்பட்டுவிட்டன. போக்குவரத்திற்கு கார் மற்றும் பேருந்துகள் உதவிகரமாக இருக்கின்றன. இந்த விஷயத்திலும், தற்போது ஒட்டகங்களின் உதவி தேவைப்படாமல் போய்விட்டது.
எல்லாவற்றுக்கும் மேலாக, 2000-ஆம் ஆண்டிலிருந்து டிராக்டரின் விற்பனை பன்மடங்கு அதிகரித்துவிட்டது. அதனால், நிலத்தை உழுவது போன்ற விவசாய வேலைகளுக்கும் தற்போது யாரும் ஒட்டகங்களைப் பயன்படுத்துவது இல்லை.
கூடவே மேய்ச்சல் நிலங்கள் மற்றும் புல்வெளிப் பகுதிகளின் அழிவும் ஒட்டகங்களின் எண்ணிக்கை குறைவதற்கு மிக முக்கிய காரணங்களாகும்.
சு.கவிதா
