
துவரை
ஆங்கிலப் பெயர்கள்: 'ரெட் கிராம்' (Red Gram), 'பீஜியன் பீ' (Pigeon Pea), 'தூர் தால்' (Toor Dhal)
தாவரவியல் பெயர்: 'காஜானஸ் இன்டிகஸ்' (Cajanus indicus)
தாவரக் குடும்பம்: 'ஃபாபாசியே' (Fabaceae)
நாம் அன்றாடம் உண்ணும் உணவில், துவரம் பருப்பு முக்கிய இடம் வகிக்கிறது. உடலுக்குத் தேவையான புரதம், மாவு, (Carbohydrate) எரிமம் போன்ற பல ஆற்றல் சத்துகள் நிறைந்தது.
* துவரைச் செடி 1 மீட்டர் முதல் 4 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.
* வளமான மண்ணில் செழித்து வளரும்.
* இதன் தாயகம் வட ஆசியா.
* ஓராண்டுப் பயிராகவும் 3 ஆண்டுப் பயிராகவும் வளர்கிறது.
* உளுந்து, வேர்க்கடலை, பருத்தி, பச்சைப் பயறு போன்ற செடிகளின் இடையே ஊடு பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது.
* நீள வடிவிலான எதிரடுக்கில் அமைந்த இலைகளை உடையது.
* பூ மஞ்சள் நிறத்தில் ஊதா, சிவப்பு நிற இதழ்களுடன் இருக்கும்.
* ஆறு மாதத்தில் பூக்க ஆரம்பிக்கும்; கொத்தாகக் காய்க்கும்.
* காய்கள் முற்றிய பின் உலர்த்தப்பட்டு, துவரம் பருப்பு எடுக்கப்படும்.
* விதை மூலம் இனப்பெருக்கம் ஆகிறது.
* செடியின் இலைகள், பருப்பின் தோல்பகுதி ஆகியவை கால்நடைத் தீவனமாகப் பயன்படுகின்றன.
* உலகின் மொத்த உற்பத்தியில், 82 சதவீதம் இந்தியாவில் விளைகிறது.
- கி.சாந்தா

