PUBLISHED ON : அக் 23, 2017

டெங்கு பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள, இந்திய அரசின் ஆராய்ச்சி மையம், டெங்குவுக்கு ஆயுர்வேத மருத்துவத்தின் உதவியுடன், நவீன மருந்தை உருவாக்கியுள்ளது. டெங்கு வந்த முதல் நாளே, அதைக் கண்டறியும் சோதனை 'கிட்'டையும் தயாரித்துள்ளது. அடுத்து, டெங்கு வராமல் தடுக்க, ஒரு தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறது.
இந்த முயற்சிகள் பற்றி, இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சர்வதேச மரபியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் (International Centre For Genetic Engineering And Biotechnology) மூத்த விஞ்ஞானி டாக்டர் நவீன் கண்ணாவுடன், மத்திய அரசு விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், ராஜ்ய சபா தொலைக்காட்சிக்காக நடத்திய உரையாடலில் இருந்து முக்கிய தகவல்கள்:
டெங்கு பரிசோதனை கிட்
பல ஆண்டுகளுக்கு முன்னர், ஐ.சி.ஜி.ஈ.பி.யின் (ICGEB) இயக்குனருக்கு, அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ராணுவ வீரர்களுக்கு டெங்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, நாம் டெங்கு பரிசோதனைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார் கலாம். டெங்கு பரிசோதனை கிட்டை உருவாக்குவதற்கான தொடக்கமாக அந்தக் கடிதம் அமைந்தது.
ஆய்வைத் தொடங்குவதற்குத் தெளிவாக வகைப்படுத்தப்பட்ட ரத்தசீர மாதிரிகள் தேவை. அதாவது டெங்கு தொற்றுள்ள ரத்தசீரம் எது; டெங்கு இல்லாத ரத்தசீரம் எது என்பது மிகத் தெளிவாக வகைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். நம்மிடம் அத்தகைய தெளிவான ரத்த மாதிரிகள் அப்போதைக்கு இல்லை.
ஐ.சி.ஜி.ஈ.பி. ஒரு சர்வதேச மையம் என்பதால், இலங்கை மாணவர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள். 1970ல் இருந்தே இலங்கையில் டெங்கு மிகப்பெரிய நோய். அதனால், அவர்களிடம் வகைப்படுத்தப்பட்ட ரத்த மாதிரிகள் உண்டு. ஒரு நாட்டில் இருந்து ரத்த மாதிரிகளை இன்னொரு நாட்டிற்கு எடுத்துச் செல்வது மிகவும் கடினம்.
அதே சமயத்தில், வைரஸ் தொற்றுக்குப் பிறகு உருவாகும் ஆண்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு புரோட்டீன்களை ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு எடுத்துச் செல்ல முடியும். எனவே, ஐ.சி.ஜி.ஈ.பி.யின் ஆய்வுக்கூடத்தில், மீள்சேர்வு (Recombinant) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பல பரிசோதனை மாதிரிகளை உருவாக்கி, இலங்கைக்கு எடுத்துச் சென்று பரிசோதித்து, அங்கிருந்து மீண்டும் மாதிரிகளை எடுத்துவந்து, அவை சரிதானா என இங்கு நமது ஆய்வகத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். பல ஆண்டுகள் உழைப்பிற்குப் பிறகு, டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்ட முதல் நாளிலேயே பரிசோதிக்கும் கிட்டை உருவாக்கியுள்ளார்கள்.
நான்கு வகை டெங்கு
டெங்குவில் DENV-1, DENV-2, DENV-3, and DENV-4 என, நான்கு வகையான வைரஸ்கள் உண்டு. வழக்கமாக ஒரு வைரஸ் தாக்கினால், நமது உடல் அந்த வைரஸைக் கட்டுப்படுத்தி, உடலைப் பார்த்துக்கொள்ளும்; ஆயுள் முழுக்க அந்த வைரஸ் இனி நம்மைத் தாக்காத அளவுக்கு ஆண்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்புக் காரணியை உடல் தயாரித்துவிடும்.
ஆனால், டெங்குவில் நான்கு வைரஸ்கள் இருப்பதால், நமக்கு இரண்டாவது முறையாக, வேறொரு டெங்கு வைரஸ் தாக்கினால் ஆபத்து. இரண்டாம் நிலை டெங்கு என்று இது அழைக்கப்படுகிறது. இதனால், ரத்தப்போக்கு நிகழ்ந்து, டெங்கு ஷாக் சிண்ட்ரோம் ஏற்பட்டு, நோயாளி வெகுவிரைவில் இறக்கக்கூடும்.
ஆக, முதலில் காய்ச்சலுக்குக் காரணம் டெங்குவா என்பதைக் கண்டுபிடிப்பதுதான் மிகவும் முக்கியம். வந்துள்ளது முதல் நிலை டெங்குவா அல்லது இரண்டாம் நிலையா என்பதையும் கண்டறிய வேண்டும். அப்போதுதான், நோயாளிக்கு எந்த வகை சிகிச்சை அளிப்பது என்பதைத் தீர்மானிக்க முடியும். இவை அனைத்தும் அந்தக் 'கிட்'டால் சாத்தியம்.
டாக்டர் கண்ணா தலைமையிலான குழு, 'கிட்'டை 3 விதமான அடையாளங்கள் (Markers) அடிப்படையில் உருவாக்கியுள்ளது. முதலாவது ஆண்டிஜென் எனப்படும் வைரஸ், நமது ரத்த ஓட்டத்தில் கலந்துள்ளதா என்பதைக் கண்டறியும். இதற்காக சில சேர்மங்களை (Reagent) உருவாக்கியிருக்கிறார்கள்.
அடுத்து, உடல் வைரஸிற்கு எதிராக வினையாற்றத் தொடங்கும்போது, ஆரம்பத்தில் ஐ.ஜி.எம். (IgM) எனப்படும் நோய் எதிர்ப்புக் காரணியும், பிறகு ஐ.ஜி.ஜி. (IgG) எனப்படும் காரணியும் உற்பத்தியாகும். ஐ.ஜி.ஜி. வாழ்நாள் முழுவதும் உடலில் இருக்கக்கூடியது. நமது விஞ்ஞானிகள் மூன்று நிலையிலும் உறுதிப்படுத்தக்கூடிய கிட்டை உருவாக்கியுள்ளார்கள்.
குறிப்பாக, நோய்த்தொற்றின் தொடக்கத்தில், ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கக்கூடிய வைரஸ் ஆண்டிஜென் முதல் நாள் அன்றே உறுதிப்படுத்தக்கூடியது. வினோதம் என்னவென்றால், ஒருவருக்கு சைலண்ட் டெங்கு எனப்படும் காய்ச்சல் இல்லா டெங்கு வந்து, ஒரு பாதிப்பும் நேர்ந்திருக்காமல் போயிருக்கும். அவருக்கு டெங்கு வந்துள்ளதா என்பதையும் இந்த கிட் உறுதிப்படுத்தும்.
சந்தையில்…
இந்தக் கிட்டை உருவாக்கிய பிறகு, அதன் தொழில்நுட்பத்தை உலக சுகாதார நிறுவனம் சான்று பெற்ற, ஓர் உள்நாட்டு நிறுவனத்திற்கு ஐ.சி.ஜி.ஈ.பி. வழங்கியது. விலை குறைவான இந்த கிட், சர்வதேசத் தரத்துடன் இருக்குமா என, முதலில் அந்த நிறுவன அதிகாரிகள் சந்தேகம் கொண்டனர்.
தற்செயலாக, அதே சமயத்தில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் லலித் மஹாஜனுக்குக் காய்ச்சல் வந்ததிருக்கிறது. இந்தக் கிட்டை அவருக்குப் பரிசோதித்துப் பார்த்ததில், அவருக்கு வந்தது டெங்கு என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அமெரிக்கா, கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் சிறந்த கம்பெனிகள் தயாரித்த கிட்களிலும், அவரது ரத்த மாதிரியை சோதித்துப் பார்த்திருக்கிறார்கள்.
அந்த மூன்று கிட்களின் முடிவுகள், முதலில் அவருக்கு டெங்கு இல்லை என்றன. இந்த மாதிரியான சூழலில், வழக்கமாக இந்தியத் தயாரிப்பு தரமற்றது என்று தான் பெரும்பாலானோர் முடிவுக்கு வருவார்கள். ஆனால், மஹாஜன் அவ்வாறு செய்யவில்லை. அடுத்த 30 நாட்களுக்கு, தன்னுடைய ரத்த மாதிரியைச் சேகரிக்கச் சொன்னார். நான்கு கிட்களையும் பயன்படுத்திப் பார்த்ததில், மற்ற கிட்கள் சிறிது நாட்கள் கடந்து டெங்கு இருப்பதை உறுதி செய்தன. ஆக, அவருக்கு வந்த காய்ச்சல் டெங்கு என்பதும், மற்ற நாடுகளின் தயாரிப்புகளால் அதை முதல் நாள் ரத்தத்தைக் கொண்டு உறுதிப்படுத்த முடியவில்லை என்பதும், நமது இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கிய கிட்டால் அது முடிந்தது என்பதும் நிரூபணமானது.
இன்றைக்கு இந்தப் பரிசோதனை கிட், உலகில் முன்னணி வகிக்கிறது. இதன் காரணமாக, இந்த கிட்டுக்கு 'டெங்கு டே ஒன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து விலை அதிகமான கிட்டை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, இன்றைக்கு நாம் தரமான கிட்டை குறைந்த விலையில் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். இதனால், பிற ஏழை நாடுகளைச் சேர்ந்த மக்களும் பயனடைகிறார்கள்.
மருந்து
ஒரு முறை, முனைவர் எம்.எஸ். வாலியாதன் (M.S.Valiathan) ஐ.சி.ஜி.ஈ.பி. ஆராய்ச்சி மையத்தில் 'ஆயுர்வேதமும், உயிரியலும்' என்பது குறித்து, ஆராய்ச்சி மாணவர்களுக்கு உரையாற்றினார். ஆயுர்வேதத்தில் தொன்மையான விஷயங்கள் குறித்த அறிவாற்றல் இருந்தும், நவீன பரிசோதனை முறைகள் எதுவும் உறுதுணையாக இல்லை என்று கூறியுள்ளார்.
அந்தச் சமயத்தில், ரான்பாக்ஸி நிறுவனம், 'நீங்கள் டெங்கு குறித்து ஆராய்ச்சி செய்கிறீர்கள்; எங்களிடம் டெங்கு மருந்து வாங்குவதற்கான ஆட்கள் இருக்கிறார்கள், நாம் ஏதாவது செய்யலாமா?' என்று ஐ.சி.ஜி.ஈ.பி.யிடம் கேட்டுள்ளது. மையத்தின் இயக்குனர் வழங்கிய உதவியால், ஆயுர்வேதமும், உயிரிதொழில்நுட்பமும் இணைந்தது.
'சிசம்பெலோஸ் பெரைரா லின்' (Cissampelos pariera Linn) என்ற தாவரத்தில் இருந்து, (தமிழில் பொன்முசுட்டை/வட்டத்திருப்பி) இவர்கள் உருவாக்கிய மருந்து, நான்கு டெங்கு வைரஸ்களையும் அழித்துவிடும்.
அடுத்த கட்டமாக, டெங்குவைத் தடுக்கும் வேக்சின் எனப்படும் தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியிலும் இந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
