PUBLISHED ON : ஆக 01, 2016

நீர்ச் சுழற்சிக்கு முக்கிய காரணம் மழை. மழை இல்லாது போனால் நதிகள், ஆறுகள், குளம், குட்டை எதுவுமே இல்லை. வள்ளுவர் மழையை 'வான் அமுதம்' என்று குறிப்பிடுகிறார்.
மழையை அளக்கும் கருவிக்கு ரெயின் கேஜ் (Rain gauge), உடோமீட்டர் (Udometer), ப்லுவியோ மீட்டர் (Pluviometer), ஓம்ப்ரோ மீட்டர் (Ombrometer) என்று விதவிதமான பெயர் உண்டு.
மழை அளவு: மழை சென்டி மீட்டர் அளவில் குறிக்கப்படுகிறது. 20 முதல் 30 கி.மீ. தூரத்துக்கு ஒரு மழை அளவு மானி வைக்கப்படுகிறது. சாதாரண மழை அளவு மானி, தானியங்கி அளவு மானி, செயற்கைக் கோளுடன் தொடர்புடைய அளவு மானி என மூன்று வகைகளில் மழை நீர் கணக்கிடப்படுகிறது.
சாதாரண மழை அளவு மானி மற்றும் தானியங்கி மழை அளவு மானி ஆகிய இரண்டின் மூலம் எடுக்கப்படும் மழை அளவானது ஒரே மாதிரியாக இருந்தால்தான் மழை அளவு சரியாக இருப்பதாக அர்த்தம். சாதாரண நாட்களில் 3 மணி நேரத்துக்கு ஒரு முறையும், மழைக் காலங்களில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையும் மழை அளவு கணக்கிடப்படுகிறது.
செயற்கை மழை: இயற்கையாகப் பொழிய வேண்டிய மழை வராது போனால், அறிவியல் தொழில்நுட்பத்துடன் வேதிப்பொருட்களைத் தூவி மழையை உண்டாக்குவது ஒரு தொழில்நுட்பம்.
வானில் நகர்ந்துகொண்டிருக்கும் மேகங்களை, மழை தேவைப்படும் இடத்திற்குத் திருப்புவது, காற்றழுத்தத்தை உண்டாக்குவது, அந்தக் காற்றழுத்தத்தின் வாயிலாக மழை மேகங்களை அதிகரிக்கச் செய்வது, பின் அவற்றைக் குளிரச் செய்து மழையை பொழிய வைப்பது என்று அந்த செயல்முறை நீளும். கால்சியம் கார்பைடு, கால்சியம் ஆக்ஸைடு, யூரியா, அமோனியம் நைட்ரேட், சமையல் உப்பு, உலர் பனி, வெள்ளி அயோடைடு போன்ற ரசாயனக் கலவைகள் செயற்கை மழை தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
