PUBLISHED ON : பிப் 25, 2019

ருக்மிணிதேவி அருண்டேல்
29.2.1904 - 24.2.1986
மதுரை, தமிழ்நாடு.
இந்திய சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே 'சதிர்' எனும் நடனத்தைப் பயின்று ஆடி வந்தனர். அதனைப் பலரும் கற்கும் வகையில் 'பரதநாட்டியம்' எனும் பெருமைக்குரிய கலையாக மாற்றியவர், ருக்மிணிதேவி அருண்டேல்.
பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே இசையைக் கற்று, நடனம் ஆடுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். பலவகையான தடைகளைக் கடந்து பரதநாட்டியத்தை கற்றுத் தேர்ந்து, 'கலாக்ஷேத்ரா' என்ற கலைப் பள்ளியை ஆரம்பித்தார். தந்தை மூலமாக அன்னிபெசன்ட் அம்மையாருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. பெண் சுதந்திரம், உரிமை போன்ற அன்னிபெசன்டின் சிந்தனைகளால் ருக்மிணி ஈர்க்கப்பட்டார். அதன்மூலம், பெண்களுக்குக் கல்வி முக்கியம் என்பதை உணர்ந்து பள்ளி ஒன்றையும் நிறுவினார்.
ருக்மிணி, நடனம் இசையோடு மட்டுமல்லாது, விலங்குகளையும் அதிகம் நேசித்தார். விலங்குகள் நல வாரியத்தின் முதன்மைச் செயலராகப் பணிபுரிந்தார். இவரது முயற்சியால் 'விலங்குகள் வன்கொடுமைச் சட்டம்' நடைமுறைக்கு வந்தது.
குடியரசுத் தலைவர் பதவி வாய்ப்பும் இவரைத் தேடி வந்தது. அதற்காக அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், இவரைக் கேட்டபோது, 'கலைக்காகப் பணிபுரிவதே என் விருப்பம்' என்று கூறி அதனை ஏற்க மறுத்தார். கலையைத் தனது உயிர் மூச்சாக நினைத்து, அதன் வளர்ச்சிக்காக உழைத்தார். பரதநாட்டியத்தைப் பல நாடுகளுக்குச் சென்று அடையாளப்படுத்திய 'தனிப்பெரும் கலைஞர்' ருக்மிணி தேவி அருண்டேல் என்றால் மிகையல்ல!
விருதுகள்
1956: பத்ம பூஷண்
1967: சங்கீத நாடக அகாதெமி
1968: பிராணிமித்ரா
