வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள்: துணிச்சலாக மீட்ட பெண் காவலர்
வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள்: துணிச்சலாக மீட்ட பெண் காவலர்
PUBLISHED ON : அக் 01, 2018

புனேயில் பெய்துவரும் பருவமழையால், அதன் புறநகர்ப் பகுதியில் உள்ள கடக்வாஸ்லா அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து, அணையிலிருந்து முக்தா கால்வாய் வழியாக நீர் திறக்கப்பட்டது. கடந்த வியாழக் கிழமை (செப். 27) காலை, சுமார் 15 மீட்டர் நீளத்துக்கு கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இந்த வெள்ளம், தண்டேகர் எனும் பகுதியிலுள்ள குடிசைகள் நிறைந்த குடியிருப்புக்குள் புகுந்தது.
குடிசைப் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது குறித்து தட்டாவாடி காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. காவல் துறை உயரதிகாரி, பெண் காவலர் நீலம் கெய்க்வாட்டை (Neelam Gaikwad) தொடர்பு கொண்டு, அப்பகுதிக்குச் செல்ல உத்தரவிட்டார். நீலம், துணிச்சல் மிக்கவர் என்பதாலும், ஆபத்துக் காலத்தில் சமயோசிதமாகச் செயல்படுவார் என்பதாலும் அவர் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனிடையே, அணையிலிருந்து கால்வாய் வழியாகத் திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. தண்டேகர் பகுதிக்குச் சென்ற நீலம், கைக்குக் கிடைத்த கயிறு, டயர் போன்றவற்றைப் பயன்படுத்தி, 2 மணி நேரத்துக்குள் 15 குழந்தைகள் மற்றும் ஏராளமான பெரியவர்களை மீட்டு, பாதுகாப்பான இடத்தில் விட்டார்.
“உயர்ந்து வரும் வெள்ளத்தினால் முதல் ஆபத்து குழந்தைகளுக்குத்தான் என்பதால், அவர்களைத் தேடிப் பிடித்து வெளியேற்றினேன். பெண்களின் கைகளைப் பிடித்தும், குழந்தைகளை. என் முதுகில் உப்பு மூட்டை போல் கட்டிக் கொள்ளச் சொல்லியும், பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வந்தேன்.” என்கிறார் நீலம்.
மீட்புப் படையினர் வந்து சேர்ந்த பிறகு, வெள்ளத்தில் சிக்கியவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர். நீலத்தின் துரிதமான செயற்பாடு காரணமாக, உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. நீலத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.
