PUBLISHED ON : ஜன 07, 2019

சீனாவில் பள்ளி மாணவர்களின் சீருடையில் 'சிப்' பொருத்தப்பட்ட நவீன உடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தெற்குச் சீனாவின் சில பள்ளிகளில் இம்முயற்சி கடந்த நவம்பர் மாதம் சோதனை முயற்சியாகத் தொடங்கப்பட்டது. ஜி.பி.எஸ். வசதி மூலம் மாணவர்களைக் கண்காணிக்க முடியும் என்பது இதன் சிறப்பு. இந்த நவீன சீருடையை அணிந்துகொண்டு மாணவர்கள் பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்ததும் குறுஞ்செய்தி பெற்றோருக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் சென்றுவிடும்.
பள்ளி நடக்கும்போது, வகுப்பறையை விட்டோ, பள்ளியில் இருந்தோ மாணவர் வெளியேறினால் அலாரம் அடித்து உஷார் படுத்திவிடும். இதுமட்டுமல்லாது, வகுப்பறையில் மாணவர் பாடத்தைக் கவனிக்காது தூங்கினாலும் அலாரம் அடித்துவிடும். இதற்குப் பெற்றோரிடமிருந்து நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளதால், பல பள்ளிகள் இவ்வகைச் சீருடைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
