PUBLISHED ON : டிச 18, 2017

இன்றைய இளம் தலைமுறையினர் அறிவுக்கூர்மையோடு இருக்கிறார்கள். முந்தைய தலைமுறையைவிட கல்வி, தொழில்நுட்பம் போன்ற பல வளர்ச்சிகளை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். அனுபவமே சிறந்த ஆசான் என்பார்கள். இளம் தலைமுறையினரின் சிந்தனை எப்படியிருக்கிறது. அவர்கள் தெளிவான சிந்தனையோடு இருக்கிறார்களா? அல்லது மனமுதிர்ச்சியின்றி சுயநலத்தோடு செயற்படுகிறார்களா? என்பது குறித்து, சென்னை, திருவொற்றியூர், கவிபாரதி வித்யாலயா பள்ளி மாணவர்கள் கலந்துரையாடினார்கள். தெளிவான சிந்தனை, மனமுதிர்ச்சி, சுயநலம் போன்றவை குறித்து, அவர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகளைத் தெரிந்துகொள்வோம்.
செ.தினேஷ், 10ஆம் வகுப்பு
சென்னையில வெள்ளம் வந்த சமயத்துல நிறைய இடத்துல உதவி பண்ணது இளைஞர்கள்தான். அவங்கதான் களத்துல இறங்கி வேலை செஞ்சாங்க. எல்லா விஷயத்துக்கும் அரசாங்கத்தோட உதவியையே எதிர்பார்த்துக்கிட்டு இருக்கக்கூடாது. உனக்கு ஏன்டா அந்த வேலைன்னு பேரண்ட்ஸ் சொல்லுவாங்க. ஆனா நாமும் சமுதாயத்தோட அங்கம்ங்கிற தெளிவான சிந்தனை இளைய தலைமுறைகிட்டதான் இருக்கு. முக்கியமா படிக்கற விஷயத்துல ரொம்பத் தெளிவா இருக்காங்க. எல்லாத்தையும் ஈசியா கத்துக்கறாங்க. முன்ன இருந்த தலைமுறைக்கும், இப்ப இருக்கற தலைமுறைக்கும் மனதளவில நிறைய மாற்றங்கள் இருக்கு. தெளிவான சிந்தனையும், மனமுதிர்ச்சியும் இருக்கு.
ம.வி.மஹிதா, 10ஆம் வகுப்பு
இன்னைக்கு இருக்கற தொழில்நுட்ப வளர்ச்சி, மாணவர்களை அதிக சோம்பேறியா ஆக்கியிருக்கு. கணக்குப் போடணும்னா கால்குலேட்டர்; எதையாவது தெரிஞ்சுக்கணும்னா கூகுள், இணையம்னு மாத்தியிருக்கு. அப்பா, அம்மா, பெரியவங்க யார் சொல்றதையும் கேக்காம, தான்தான் பெரிய அறிவாளின்னு நினைச்சுக்கிட்டு செயற்படற மனநிலை இருக்கு. முழுக்க முழுக்க சுயநலமாவே நடந்துக்கறாங்க. படிக்கற விஷயத்துல ரொம்ப ஆர்வமாவும், சிறப்பாவும் இருக்காங்க. அதேசமயம் பொறுமை, சகிப்புத்தன்மை இதெல்லாம் குறைஞ்சிடுது. எல்லாம் ஈசியா கிடைச்சிடணும்னு எதிர்பார்க்கறாங்க. இன்றைய சமூகத்தோட இளைய தலைமுறை சுயநலமுள்ளவங்களாத்தான் இருக்காங்க.
ந.இர.அட்சயா, 10ஆம் வகுப்பு
முன்னயெல்லாம் அஞ்சு வயசுலதான் ஸ்கூலுக்குப் போவாங்க. ஆனா இப்போ, இரண்டரை வயசிலயிருந்து படிக்க ஆரம்பிச்சுடறாங்க. பொதுஅறிவு விஷயங்களையெல்லாம் சின்ன வயசிலேயே தெரிஞ்சுக்கறாங்க. ஓரளவு உலக அனுபவத்தை சீக்கிரமே கத்துக்கறாங்க. புதிய தொழில்நுட்பங்கள் எளிதா பழகிடுது. இப்படிப் பல காரணங்களால் தெளிவான சிந்தனையும் மனமுதிர்ச்சியும் அவங்களுக்கு கிடைக்குது. உலகம் பத்தின பல விஷயங்கள்ல அவேர்னஸ் இருக்கு. உயர்கல்வி, வேலைவாய்ப்பு இதிலெல்லாம் அவங்களுக்கு தெளிவான சிந்தனை இருக்கு. இது ஒரு நல்ல மாற்றம்தான்.
பி.திரிஷா, 10ஆம் வகுப்பு
தொழில்நுட்ப வளர்ச்சிங்கறது, இளம்தலைமுறையினரை சுயநலமுள்ளவங்களா ஆக்கியிருக்கு. சமூக வலைத்தளப் பழக்கங்கள் நம்ம மனப்போக்கையே மாத்திடுது. பெரியவங்களை மதிக்கறதில்லை. எல்லாம் எங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறாங்க. இளம்தலைமுறையோட சுயநலம் காரணமா பெத்தவங்களோட உழைப்பு, ஆசிரியர்களோட கண்டிப்பு எல்லாமே எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்துது. எதுக்கெடுத்தாலும் கோபப்படறாங்க. நினைச்சதை வாங்கணும்னு நினைக்கறாங்க. உழைப்புங்கற விஷயத்துல ஆர்வம் காட்டறதில்ல. சுயநலமா நடந்துக்கறாங்க.
மு.கோகுல்நாத், 10ஆம் வகுப்பு
சமூகத்துல நடக்கற எல்லா விஷயங்களையும் உடனுக்குடன் தெரிஞ்சுக்கறதால பிரச்னைகள் குறித்த தெளிவான சிந்தனை இருக்கு. பொது இடத்துல எப்படி நடந்துக்கறது, மத்தவங்களுக்கு உதவறது, பேரண்ட்சோட எல்லா விஷயங்களையும் கலந்துரையாடறதுன்னு பல விஷயங்களில இளைய தலைமுறை தெளிவான சிந்தனையோடதான் இருக்காங்க. சோஷியல் மீடியா மூலமா பல விஷயங்களை உடனுக்குடனே தெரிஞ்சுக்க முடியுது. செய்திகளை பரிமாறிக்க முடியுது. அதனால அது தவறில்லை. அதைத் தவிர்க்க முடியாது. இன்னைக்கு இருக்கற இளைய தலைமுறை, தெளிவான சிந்தனையோடு முன்னேற்றப் பாதையில்தான் போறாங்க.
க.சதீஷ், 8ஆம் வகுப்பு
தெளிவான சிந்தனை, சுயநலம் ரெண்டுமே சேர்ந்துதான் இருக்கு. சில விஷயத்துல அனுபவம் இல்லாத காரணத்தால சுயநலமா செயற்படறாங்கங்கறதை மறுக்கமுடியாது. ஆனா அறிவுக்கூர்மை, தெளிவான சிந்தனைதான் அதிகமா இருக்கு. கல்வியோட முக்கியத்துவம் அவங்களுக்குத் தெரிஞ்சுருக்கு. தான் என்னவா ஆகணும்ங்கிற தெளிவான சிந்தனையும் இருக்கு. சுயநலமா சிலர் வேணும்னா இருக்கலாம். எல்லா விஷயத்தையும் நல்லா யோசிச்சு முடிவெடுக்கற திறமை இளைய தலைமுறைகிட்ட இருக்கு.