PUBLISHED ON : செப் 02, 2019

காட்டுத்தீ பற்றி உலகமே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் என்ன நன்மை என்றுதானே யோசிக்கிறீர்கள்? இயற்கையாக நடக்கும் எது ஒன்றிலும், நன்மை, தீமை என இரண்டுமே உண்டு. அந்த விதிப்படி, காட்டுத்தீயிலும் பல நன்மைகள் உள்ளன.
நாசத்தையும் அழிவையும் ஏற்படுத்தும் நெருப்பு, அதிகமான தாவரங்களுக்கும் விலங்கினங்களுக்கும் நன்மையும் செய்கிறது. சொல்லப்போனால், இயற்கையின் சமநிலையைக் காப்பதில் அது முக்கிய பங்கு வகிக்கிறது.
நாம் இங்கு பார்க்கப்போவது, நிலத்தைப் புதுப்பிக்கும் காட்டுத்தீயைப் பற்றித்தான். இதைப்பற்றிப் புரிந்துகொள்ள, ஊசியிலை மரங்களின் (conifers) உதாரணத்தைப் பார்ப்போம். இவ்வகை மரங்கள் உயிர்வாழ்தலுக்கே காட்டுத்தீ மிகவும் அவசியம்.
ஊசியிலை மரங்கள் நிறைந்த காடொன்றை எடுத்துக் கொள்வோம். குறிப்பாக, பைன் மரங்கள். நிலத்தில் எங்கு நன்றாக வெயில் அடிக்கிறதோ அங்குதான் இம்மரங்கள் வேகமாக வளரும். நிலத்தில் விழுந்த விதைகள் வளரும்போது, வேகமாக பக்கத்தில் இருக்கும் செடியுடன் போட்டி போட்டு வளரும்.
காலப்போக்கில், உயரமான, அடர்த்தியான இலைகள் கொண்ட மரங்களாக மாறி, அவ்விடத்தையே மூடிவிடும். அப்போது நிலத்தில் சூரிய ஒளிபடுவதே அரிதாகிவிடும். இதனால், அந்த நிலத்தில் புதிய மரங்கள் முளைப்பதே சாத்தியமற்றதாகிவிடும்.
இந்தச் சூழலில், காட்டுத்தீ ஏற்படாமல் இருந்தால், இம்மரங்களின் இனம் காலப்போக்கில் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. மரங்களோடு சேர்ந்து அவற்றைச் சார்ந்திருக்கும் பிற உயிரிகளும் அழிந்துபோகும்.
காட்டுத்தீ ஏற்பட்டு, எரிந்துபோன மரங்களின் சாம்பலில் அதிகமான சத்துகள் உண்டு. அவை நிலத்தில் சேர்ந்து புதிய காடுகளுக்கு ஊட்டமளிக்கிறது. காட்டுக்குத் தேவையான நிலத்தின் மரங்களோடு போட்டியிடும் பிற தேவையற்ற செடிகள், மரங்கள், பூச்சிகளால் தாக்கப்பட்டவை ஆகியன அழிந்துபோகும்.
மேலும், தீயில் எஞ்சிய மரத்தண்டுகள் பல உயிரிகள் வாழ்வதற்கேற்ற இடமாகவும் இருக்கிறது. அழுகிப்போன அல்லது உலர்ந்துபோன இலைதழைகள் எரிந்ததும், அங்கு புதிய செடிகளும் புற்களும் முளைக்கின்றன.
ஒருவேளை காட்டுத்தீ பற்றாமல் நீண்ட காலவெளிக்குப் பிறகு நடக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். காடுகளில் தேங்கியுள்ள இலைகள், குப்பைகளை எரிக்கும் காட்டுத்தீ, கட்டுப்படுத்தப்பட முடியாததாகவும் மாறிவிடும்.
- ஆசிஃபா
