PUBLISHED ON : மே 09, 2016

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பாத்திரம் 'பிரஷர் குக்கர்' (Pressure Cooker). நீராவி அழுத்தத்தைப் பயன்படுத்தி சமையல் செய்யப் பயன்படும் பாத்திரம். இதன் மூலம் அரிசி, பருப்பு, காய்கறிகளை சீக்கிரமாக வேக வைக்கலாம். எளிமையான, அதே சமயம் உபயோகமான பாத்திரம் இது.
'டெனிஸ் பாபின்' (Denis Papin) என்ற ஃபிரெஞ்சு நாட்டு இயற்பியல் விஞ்ஞானி 1679ல் முதன் முதலாக பிரஷர் குக்கரை வடிவமைத்தார். 'பாபின்ஸ் டைஜஸ்டர்' (Papin's Digester) என்ற பெயரில் குறிப்பிடப்பட்ட இந்த குக்கர், எலும்பில் இருந்து கொழுப்பைப் பிரித்து எடுத்து உணவுக்குப் பயன்படுத்த உதவியது.
குக்கர் இயங்கும் முறை: தண்ணீரைச் சூடாக்கும்போது அதன் அழுத்தம் அதிகரித்து நீராவி உருவாகும். இதை அடிப்படையாக வைத்துதான், பிரஷர் குக்கர்கள் வடிவமைக்கப்படுகின்றன. தண்ணீர் அதிகக் கொதிநிலையில் வாயுவாக மாறும். வாயு வடிவத்தில் மாறும் நீராவியின் சக்தியைக் கொண்டு குக்கர் செயல்படுகிறது.
குக்கரின் பாகங்கள்: ஒரு பெரிய பாத்திரத்திற்கு உள்ளே சில சின்னப் பாத்திரங்கள். மேலே ஒரு மூடி, அதற்கு ஒரு கைப்பிடி. அதன் தலையில் ஒரு 'வெயிட்' (Weight), அப்புறம் 'வாயுத் தடுப்பு' (கேஸ்கட் / Gasket) ரப்பர் வளையம். நீராவி வெளியேறாமல் இது தடுக்கிறது. சில குக்கர்களின் அடிப்பகுதியில் செம்பு (காப்பர் பாட்டம் / Copper Bottom) பூசியிருப்பார்கள். பாத்திரத்திற்குள் நெருப்பு சீராகப் பரவ இது உதவுகிறது.
குக்கருக்கு உள்ளே நீராவி அடைபட்டுக் கிடப்பதால், அழுத்தம் அதிகரிக்கும். உணவுப் பொருள்கள் வேகமாக வேக இதுதான் காரணம். குக்கரின் மேலே ஒரு 'வெயிட்' (Weight) இருக்கும். குக்கருக்குள்ளே அழுத்தம் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டிப் போய்விடாமல் இது பார்த்துக்கொள்கிறது. சரி, சமையல் முடிந்து விட்டது. குக்கரைத் திறக்கலாமா? கூடாது. வெயிட்டைத் திறந்து, அழுத்தத்தைக் குறைத்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்துதான் திறக்க வேண்டும். இல்லை என்றால் அத்தனையும் நம் மேலே தெறித்துவிடும்.
