PUBLISHED ON : நவ 19, 2018

டில்லியைச் சேர்ந்த ராகேஷ் காத்ரி (Rakesh Khatri) மிகப்பெரிய வணிகர்; சுற்றுச்சூழல் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். டில்லி நகரப்பகுதிகளில், குருவிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. நகரங்களில், குருவிகளுக்கான வசிப்பிடம் இல்லாததே இதற்குக் காரணம் என்பதை அறிந்தார்.
இதைத் தொடர்ந்து, ராகேஷும், அவருடைய மனைவியும், குருவிகளுக்காக கூடுகளை வடிவமைக்கும் பயிற்சி பெற்றனர். இயற்கையில் கிடைக்கும் மூங்கில், மரப்பட்டைகள், சணல், காயர் ஆகியவற்றை வைத்து கூடுகளை உருவாக்கினர்.
ஆச்சரியப்படும் விதத்தில், அவர்கள் உருவாக்கிய கூட்டில் குருவிகள் வந்து தங்கின. அதில், குருவிகள் முட்டையிட்டன. ராகேஷ் தம்பதியின் நம்பிக்கை அதிகரித்தது. இந்தப் பணிக்குப் பல இளைஞர்கள், பள்ளி மாணவ/மாணவியரை இணைத்துக் கொண்டனர். பள்ளிக்குச் சென்று கூடுகள் கட்டப் பயிற்சி அளித்து வருகின்றனர். குருவிகளைப் பாதுகாத்து வருவதற்காக, இவருக்குச் சர்வதேச அளவில் விருதுகள், அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஐம்பது வகையான பறவைகளுக்கு, கூடுகளை அமைப்பதற்கான சிறப்புப் பயிற்சியை இத்தம்பதியினர் பெற்றுள்ளனர். இதுகுறித்த விழிப்புணர்வை, பள்ளி மாணவர்களிடையே ஏற்படுத்துவதால், அவர்களுக்கு இயற்கை மீதான நெருக்கம் அதிகரிக்க வாய்ப்புண்டு என்கிறார் ராகேஷ்.
