PUBLISHED ON : ஆக 26, 2019

தோசை தான் முதலில் வந்தது என்றாலும், இட்லி இல்லாமல் பொழுதே விடியாது. சிலருடைய வீடுகளில் 365 நாளும் இட்லி சாப்பிடுவார்கள்.
புதிய இடத்திற்குச் சென்றால், எல்லோரும் முதலில் விரும்புவது இட்லியைத்தான். காரணம், அது உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாது என்பதுதான். இதன் வரலாறு என்ன?
1130- ஆண்டுகளுக்கு முன்பு, இட்லியின் முன்னோடியாக 'இட்டாரிகா' என்கிற உணவு வழக்கத்தில் இருந்தது.
உளுந்து மாவை உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுத்து, அதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள் ஆகியவை சேர்த்துத் தயாரிக்கப்படும் உணவே 'இட்டாரிகா'.
இட்டாரிகாவே, மெல்ல மெல்ல பல மாற்றங்களை அடைந்து, கடைசியாக இட்லி அவதாரம் எடுத்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
மாவைப் புளிக்கவைத்து, அதை இட்லிகளாகச் செய்யவேண்டும் என்கிற செய்முறை, நமக்கு இந்தோனேசியா நாட்டில் இருந்து வந்திருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. ஏனென்றால், இந்தோனேசிய மக்கள் சில உணவுப் பொருட்களை புளிக்கவைத்துச் சமைக்கும் வழக்கம் உள்ளவர்கள்.
குறிப்பிட்ட உணவுப் பொருளைப் புளிக்கவைத்து ஆவியில் வேகவைத்துச் சாப்பிடும் பழக்கம் அவர்களுக்கு இருந்தது.
அப்படிப் புளிக்கவைத்து, ஆவியில் வேகவைத்துச் சாப்பிடும் உணவை அவர்கள், 'கெட்லி' என்று அழைத்தார்கள்.
இந்தத் தயாரிப்பு முறையை இந்தியாவை ஆண்ட இந்து அரசர்கள் பின்பற்றி, அதில் அரிசி போன்றவற்றைச் சேர்த்து 'இட்லி' என்கிற உணவாக மாற்றியிருக்கக் கூடும் என்கிற கருத்தும் நிலவுகிறது.
1430-ஆம் ஆண்டுகளில் இட்லியைப் போன்ற 'கடுபு' என்கிற உணவு, வழக்கத்தில் இருந்ததாக கன்னட இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.
சேமியா, ரவை, கடலைப்பருப்பு போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் 'கடுபு' இலையில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கப்படும்.
இந்த உணவும் இட்லிக்கு முன்னோடியாகக் கருதப்படுகிறது.
17ஆம் நூற்றாண்டில் வெளிவந்த தமிழ் இலக்கியங்களில் இட்லியைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, அரிசி, உளுந்து ஆகிய இரண்டையும் அரைத்து ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்து, பின்னர் புளிக்கவைத்து வேகவைத்துத் தயாரிக்கப்படும் இட்லிகள் நிலவுக்கு ஒப்பாகவும் இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கின்றன.
