PUBLISHED ON : ஆக 05, 2019
விண்வெளியில் பயிர்கள் வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சியில் நாசா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஆராய்ச்சியாளர்கள் எல்.இ.டி. விளக்குகளின் மூலம், தாவரங்களுக்கு ஒளியைப் பாய்ச்சினர். இதன் விளைவாக, அவை ஊக்கம்பெற்று வளர்ந்தன. எல்.இ.டி. ஒளியால், மனிதர்களின் செல் வளர்ச்சி 100 முதல் 200 சதவீதம் அதிகரித்தது. செல்களுக்குள் உள்ள ஆற்றல் மையங்களை எல்.இ.டி. ஒளிக்கதிர்கள் தூண்டுவதால், வளர்ச்சி ஏற்படுகிறது.
விஸ்கான்ஸின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் ஹேரி வீலன், தனது ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, எல்.இ.டி. விளக்குகளின் மூலம் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து, முடிவுகளை ஆவணப்படுத்தியுள்ளார்.
இச்சிகிச்சையால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்பட்டிருந்த புண்கள் விரைவாக ஆறின. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் கீமோதெரபி சிகிச்சையால், அவர்களது தொண்டை புண்ணாகிவிடும். எல்.இ.டி. விளக்குகள் அடங்கிய கருவியை வைத்து சிகிச்சை அளித்தால், அந்தப் புண்கள் குணமாகின்றன.
விண்வெளிப் பயணத்தின்போது ஏற்படும் கதிரியக்கத் தாக்கங்களால் மனிதச்செல்கள் பாதிக்கப்படுகின்றன. அவற்றை எல்.இ.டி. சிகிச்சை மூலம் குணப்படுத்த இயலுமா என்பது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.
- பாசன்
