PUBLISHED ON : ஏப் 02, 2018

தலைப்பு என்ன சம்பந்தமே இல்லாமல் இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? பிரெஞ்சு மொழியில் 'நீங்கள் எப்படி இருக்கீங்க'ன்னு கேட்கிறோம்.
விடுமுறை வந்தாச்சு. இந்தச் சமயத்துல படிப்பைத் தவிர புதுசா ஏதாவது கத்துக்கலாம்னு தோணும்தானே? ஏன் அது ஒரு வெளிநாட்டு மொழியா இருக்கக்கூடாது? வெளிநாட்டு மொழி என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது பிரெஞ்சு. பிரெஞ்சு மொழியை எங்கு, எப்படிக் கற்றுக்கொள்ளலாம்?
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அல்லயன்ஸ் பிரான்சே (Alliance Française) மைய இணை இயக்குநர் சாரா பெல்ர்ஹாலியிடம் (Sarah Belrhali) பேசினோம்:
பிரெஞ்சை எப்படி கற்றுக்கொடுக்கிறீர்கள்?
நாங்கள், பிரெஞ்சு மொழியை, மொழியாகக் கற்றுக்கொடுக்கிறோம். அதாவது, பிரெஞ்சு, பிரெஞ்சு மொழியிலேயே கற்பிக்கப்படும். ஆங்கிலத்தில் சொல்லித்தர மாட்டோம். நிறைய விளையாட்டுகள், பயிற்சிகள் மூலம் மொழியைக் கற்றுக் கொடுக்கிறோம். அதனால், இங்கு படிப்பவர்கள் பலரும் நன்றாகப் பிரெஞ்சு பேசவும், எழுதவும் முடியும்.
எத்தனை நிலைகள் இருக்கின்றன?
மொத்தம் ஆறு நிலைகள் உள்ளன. எ1,ஏ2- ஆரம்ப நிலை. பி1,பி2 நடுநிலை, சி1, சி2 உயர்நிலை. சி1, சி2 நிலைகள் கொஞ்சம் கடினம். பி1,பி2 விலேயே நீங்கள் மொழி ஆளுமை பெற முடியும். பிரெஞ்சுக்காரர்களோடு அரசியல் பேசவோ, தத்துவம் போன்ற விஷயங்களைப் பேசவோ, சி1,சி2 அவசியம்.
விடுமுறைக்கால வகுப்புகள் உள்ளனவா?
கோடை விடுமுறைக்காக, இரண்டு மாத கோர்ஸ் அறிமுகம் செய்திருக்கிறோம். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மூன்று மணி நேரம் வகுப்புகள் நடக்கும்.
7-11 வயதுடையவர்கள், 11-15 வயதுடையவர்கள் என இரு பிரிவுகளாகப் பிரித்திருக்கிறோம்.
இரண்டு மாதத்தில் பிரெஞ்சு கற்றுக்கொள்ள முடியுமா?
இரண்டு மாத காலத்தில் பிரெஞ்சு மொழிக்கு அறிமுகமாகி இருப்பார்கள். சில விஷயங்கள் அவர்களுக்குப் புரியத் தொடங்கும். இது அடித்தளம்தான். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு விருப்பம் இருந்தால், மேலும் கற்றுக்கொள்ள முன்வரலாம்.
தமிழகத்தில் வேறு எங்கெல்லாம் பிரெஞ்சு கற்றுக் கொடுக்கப்படுகிறது?
சென்னையில் எங்கள் மையம் தவிர, சில தனியார் வகுப்புகளிலும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. திருச்சி, கோவையில் சில பகுதிகளில் எங்கள் மையம் சார்பில் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
பள்ளிகளில் கற்றுக்கொடுப்பதற்கும், நீங்கள் கற்றுக்கொடுப்பதற்கும் வித்தியாசம் என்ன?
நான் முன்பே குறிப்பிட்டதுபோல், நாங்கள் இதை மொழியாகக் கற்றுக்கொடுக்கிறோம். பள்ளிகளில் இதைப் பாடமாக எடுக்கிறார்கள். மொழியை அதனுடைய தொனியில் எடுக்கும்போதுதான் எளிதில் புரியும். இதை கற்றுக்கொள்ளவும் ஆர்வம் காட்டுவார்கள்.
* உலகம் முழுவதும் 29 நாடுகளில் பிரெஞ்சு ஆட்சி மொழியாக உள்ளது. சுமார் 12.5 கோடி மக்கள் பிரெஞ்சு மொழி பேசுகின்றனர்.
* பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பல நிறுவனங்கள் தமிழகத்தில் செயற்படுகின்றன. எனவே, வேலைக்காகவும் இம்மொழி அவசியமாகிறது. சென்னையில் மட்டும் தற்போது 80 பிரெஞ்சு நிறுவனங்கள் உள்ளன.
* வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புவோர், குறிப்பாக, கனடா, கியூபெக் போன்ற பல நாடுகளில் பிரெஞ்சு மொழி தெரிந்தவர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும்.

