PUBLISHED ON : ஜன 28, 2019
நம் அனைவருடைய பெயர்களுக்கும் நிச்சயம் அழகான பொருள் உண்டு என்பதை யோசித்திருக்கிறீர்களா?
உதாரணமாக,
மலர்விழி
மலர்போல அழகான கண்களைக் கொண்டவள்
அமுதன்
அமுதம்போல் இனியவன்
தமிழ்ச்செல்வன்
தமிழாகிய செல்வத்தை உடையவன்
அன்புமணி
அன்பாகிய மாணிக்கம்
இவையெல்லாம் தூய தமிழ்ப்பெயர்கள். பல்வேறு மதம் சார்ந்தவர்களுக்கும் பிற மாநிலத்தவருக்கும் அவர்களின் நிலப்பரப்பு, கலாசாரம் சார்ந்து பெயர்களைச் சூட்டுகின்றனர்.
ஒருவருக்கு வைக்கும் பெயர் என்பது சாதாரணமா? அவைதானே உலகில் நமக்கான தனித்த அடையாளம். ஆகவே, உலகெங்கும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் தேர்ந்தெடுப்பதற்கு முன், வெவ்வேறு பெயர்களைச் சிந்திக்கிறார்கள். அவற்றை சொல்லிப் பார்த்து, அதன் ஒலி நயம், பொருள் ஆகியவற்றையும் அலசி ஆராய்ந்து பெயர் சூட்டுகிறார்கள்.
இதற்கு உதவி தேவையா? உடனே தமிழ்ப்பெயர்களைத் தேடினால், இணையத்தில் பெயர்கள் கொட்டும். பிறமொழிகளிலும் அதேபோல்தான். இப்படிப் பெயர்களைத் தேர்ந்தெடுக்கும் பெற்றோர் ஒருபுறமிருக்க, உணர்வுப்பூர்வமான காரணங்களுக்காகச் சில குறிப்பிட்ட பெயர்களை விரும்பித் தேர்ந்தெடுக்கும் பெற்றோரும் உண்டு. எடுத்துக்காட்டாக, சிலர் தங்களுடைய தந்தை அல்லது தாயின் பெயரைக் குழந்தைக்குச் சூட்டுவார்கள், தனக்குப் பிடித்த தலைவர் அல்லது வசீகரித்த ஆளுமையின் பெயரைச் சூட்டுவார்கள், கடவுள் பெயரைச் சூட்டுவார்கள். கார்த்திகையில் பிறந்த பெண்ணுக்குக் 'கார்த்திகா' என்றும், தீபாவளி சமயத்தில் பிறந்த பையனுக்குத் 'தீபச்செல்வன்' என்றும் பெயர் சூட்டுவதுண்டு.
உங்களுடைய பெயருக்கு என்ன பொருள்? உங்களுடைய பெற்றோர் அந்தப் பெயரை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? என தேடிப் பாருங்கள். சுவாரசியமான விஷயங்கள் உங்களுக்குக் கிடைக்கும்.
அதேபோல், உங்கள் நண்பர்கள், புதிதாக அறிமுகமாகிறவர்கள் எல்லோருடைய பெயரையும் ஆராய்ந்து பாருங்கள். பிற மதம், பிற மாநிலங்களைச் சேர்ந்த நண்பர்களின் பெயர்களை எழுதிவைத்து அதன் அர்த்தத்தை இணையத்தில் தேடுங்கள். ஒருவரது பெயரை ஆராய்வது ஓர் இனிமையான பொழுதுபோக்கு, அதன் மூலம் மொழி, வரலாறு, பண்பாடு, உணர்வுகள் என்று பல விஷயங்களை அறிந்து கொள்ளலாம்!
- என். சொக்கன்
