PUBLISHED ON : அக் 19, 2016

சீனா, வேற்று கிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ளும் வகையில் பிரம்மாண்ட தொலைநோக்கி ஒன்றை சமீபத்தில் கட்டமைத்துள்ளது.
30 கால்பந்தாட்ட மைதானங்களை ஒன்றுசேர்த்தால், எவ்வளவு பெரியதாக இருக்குமோ, அந்தளவுக்கு அது பிரம்மாண்ட தொலைநோக்கி. அதன் குறுக்களவு, 500 மீட்டர். பொருட்செலவு என்று எடுத்துக்கொண்டால், இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்.
ஏன் இவ்வளவு பெரிய தொலைநோக்கி?
பிரபஞ்சத்தில், பால்வெளி என அழைக்கப்படும் எண்ணற்ற நட்சத்திர கூட்டங்கள், பெரிய நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறும் போது உருவாகும் சிறிய நட்சத்திரங்கள், அவற்றை சுற்றி வரும் கிரகங்கள் அவற்றின் துணை கோள்கள் நிரம்பியுள்ளன.
பிரபஞ்சத்தின் ஏதேனும் ஒரு மூலையில் பூமியை போன்ற உயிர்வாழ்வதற்கு ஏற்ற கிரகங்கள் இருக்கலாம் என்றும், அதில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்றும் வான்வெளி விஞ்ஞானிகள் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதற்கான உறுதியான சான்றுகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில், பூமியிலிருந்து, 1,351 ஒளியாண்டுத் தொலைவிலிருந்து சில வினோத சமிக்ஞைகள் வருவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது வேற்றுகிரக வாசிகளிடமிருந்து வந்த சமிக்ஞையாக இருக்க சாத்தியமுள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதை துல்லியமாக உணரவே, இவ்வளவு பெரிய தொலைநோக்கியை சீனா வடிவமைத்துள்ளது.
ஆச்சர்யங்கள் நிறைந்த தொலைநோக்கி
* சீனாவின் கிஸோ மாகாணத்தில், 17 வருட கால உழைப்பில், இந்த தொலைநோக்கி உருவாக்கப்பட்டுள்ளது.
* இந்த செயல்திட்டத்துக்காக, அந்த பகுதியில் வசித்து வந்த சுமார் 8,000 பேர், வெளியேற்றப்பட்டுள்ளனர்.
* பிரம்மாண்டமான தொலைநோக்கி வட்டு (டிஷ்), 4,450 முக்கோண வடிவ தகடுகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
* டிஷ் ஆன்டெனாவின் கொள்ளளவில் திராட்சை பழரசத்தை நிரப்பினால், 700 கோடி மக்களுக்கு, தலா ஐந்து பாட்டில்கள் திராட்சை பழரசம் கிடைக்கும்.
* விண்மீன்கள், பால்வெளி மண்டலங்கள் போன்ற வற்றிலிருந்தும் வேற்று கிரகவாசி களிடமிருந்தும் வரக்கூடிய மிக நுண்ணிய சமிக்ஞையைக்கூட, இந்த வட்டு உள்வாங்கும் ஆற்றல் பெற்றது.
* இந்த தொலைநோக்கி, 600 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் ஆயிரக்கணக்கான புதுப் புது விண்மீன் மண்டலங்களைக் கண்டறியும்.
* இன்னும், 20, 30 ஆண்டுகளுக்கு இந்த தொலைநோக்கி தான் உலகத்தின் அதிசிறந்த தொலைநோக்கியாக திகழும்.

