
புறாக்களுக்கு, புற்றுநோய்க் கட்டிகளைக் கண்டறியும் திறமை இருக்கிறதாம்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் ஐயோவா பல்கலைக்கழக (University of California and Iowa) ஆய்வாளர்கள் ஓர் ஆராய்ச்சி செய்தார்கள். இதில், புற்றுநோய் கட்டிகளுக்கான ஸ்லைடுகள் (Slides) புறாக்களுக்கு வரிசையாகத் தொடுதிரையில் (டச் ஸ்கிரீன் - Touch Screen) காண்பிக்கப்பட்டன. இதில், ஆபத்தான கட்டிகள் எவை, ஆபத்தில்லாத கட்டிகள் எவை என்று அடையாளம் காட்ட வேண்டும்.
ஸ்லைடுகளை, புறா தன் அலகால் 'கிளிக்' (Click) செய்து பதில் அளிக்கவும் ஆய்வாளர்கள் வசதி செய்திருந்தனர். 'கிளிக்' செய்து கண்டுபிடித்ததும், புறாக்களுக்கு உடனே தானியம் கிடைக்கும்.கொறிப்பான் (Snacks) கிடைக்கிற உற்சாகத்தில் புறாக்கள் உடனுக்குடன் புற்றுநோய்க் கட்டிகளை அடையாளம் காட்டின.
புற்றுநோய் பாதித்த கட்டிகளின் உயிரியல் கூறுகளை அவை இனம் கண்டுகொள்ள தங்களைப் பழக்கப் படுத்திக் கொண்டன. இதில் தேர்ச்சி பெற அவற்றுக்கு இரண்டு வாரங்களே ஆனது. கதிர்வீச்சு இயல் நிபுணர்கள் (Radiologists) இந்தத் திறனைப் பெற நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை பயிற்சி பெறுகின்றனர்! புறாக்களோ இரண்டு வாரங்களிலேயே 85 சதவீதம் சரியாக கணித்து ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கின்றன.
புறாக்களின் அசாதாரணமான பார்வைத் திறனே இதற்குக் காரணம் என்கின்றனர். புறாக்கள், வானத்தில் பறந்தபடியே பூமியில் விதைகள் போன்ற சின்னஞ்சிறிய பொருட்களை பார்வையாலே ஸ்கேன் செய்து பக்குவம் பெற்றுவிடுகின்றன. அபாரமான நினைவு ஆற்றல் இருப்பதால் புறாக்களால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உருவங்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியும். இவற்றை எல்லாம் கொண்டுதான் ஸ்லைடில் காட்டப்படும் காட்சிகளை அவற்றால் பிரித்து உணர முடிந்திருக்கிறது.
- சிம்மன்

