PUBLISHED ON : ஜன 28, 2019

இயற்கையோடு இணைந்து வாழ்கின்ற வாழ்க்கை மட்டுமே சரியானது. இப்படி வாழ்கின்ற வாழ்க்கைதான் மனிதனுக்கும், இயற்கைக்கும் எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. தற்போது இயற்கையோடு இணைந்து வாழ்வதில்லை.
இந்நிலை வருங்காலங்களில் மனிதர்களுக்குத் தேவைப்படும் சரிவிகித உணவை, பூமியில் உள்ள இயற்கை வளங்களில் இருந்து எடுத்துக் கொடுப்பதில் பெரும் சிக்கல்கள் உருவாகலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
பருவநிலை மாற்றம் உண்மையா, பொய்யா என்று வாதங்கள் ஒருபக்கம் நடந்தாலும், அடுத்தடுத்த தலைமுறையினர் பூமியில் வாழத் தேவையான உணவு கிடைக்குமா என்பதைத் தெரிந்துகொள்ள ஆய்வுகள் நடந்து வருகின்றன.
மனித இனம் திறம்பட இயங்க உதவும் ஆரோக்கிய உணவு அவர்களுக்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை, தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறது EAT - Lancet commission என்கிற அமைப்பு. உலகம் முழுவதிலும் 30 முன்னணி விஞ்ஞானிகள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த முதன்மைக் குழு விஞ்ஞானிகள், 16 நாடுகளைச் சேர்ந்த அறிவியல் துறை வல்லுனர்களோடு இணைந்து, ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்கள்.
ஆரோக்கியமற்ற உணவு
* உலகம் முழுவதும் 100 கோடி மக்கள், உண்ண உணவின்றிப் பசியால் அவதிப்படுகிறார்கள்.
* மற்றொரு தரப்பை (சுமார் 200 கோடி மக்கள்) பார்த்தால், தேவையான உணவைப் பெற்றாலும், அது குப்பை உணவாக இருக்கிறது.
பசியும், ஆரோக்கியமும் இல்லாத உணவும், நம்முடைய உடலுக்குள் நோய்களை வரவழைக்கின்றன. தாய்ப்பாலில் இருந்து தொடங்கி ஊட்டச்சத்தான உணவு கிடைக்கும்போதுதான், நம் ஆயுட்காலம் நீடிக்கும். இளம்வயதில் நோய் பாதிப்பால் இறப்பதைத் தவிர்க்க முடியும். ஆனால், தற்போதைய உணவு முறை முரணான தேர்வாக இருப்பதாகக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
சூழல் உணவு
சிவப்பு இறைச்சி, வெள்ளைச் சர்க்கரை போன்றவற்றின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதவிர, உற்பத்தியைப் பெருக்குவதற்காக விவசாயத்தில் பல நவீன முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்ற வாயுக்கள் வெளியேறி வளிமண்டலத்தில் கார்பன்- டை- ஆக்சைடு அளவும் அதிகரிக்கிறது. இது போன்ற விஷயங்களே சூழல் சீர்கேட்டிற்கும், பல்லுயிர் அமைப்பில் (Biodiversity) சிக்கல்கள் உருவாவதற்கும் காரணமாக அமைந்து விடுகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
உணவு தயாரிப்பாளர்கள் பொறுப்பு என்ன?
நம்முடைய உணவு தயாரிப்பவர்களின் தரம் குறித்தும், அவர்களுடைய முன்னுரிமை எப்படி இருக்கிறது என்பதும் இந்த ஆய்வறிக்கையில் பேசப்பட்டது.
* உலக அளவில் உணவு தயாரிப்பு மக்களின் ஆரோக்கியம் சார்ந்ததாக இல்லாமல், மக்களின் விருப்பங்கள் மற்றும் தேவைகள் சார்ந்ததாக மட்டுமே இருக்கின்றன.
* அதுமட்டுமல்லாமல், பூமியின் சூழலும் உணவுமுறை மாற்றத்தால் மாறுகிறது.
மாற்றமும், தவிப்பும்
ஒரு பக்கம் ஒருவேளை உணவிற்கே மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கத்தில் தேவையற்ற குப்பை உணவுகளின் மீதான மோகம் மக்களிடையே அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக, கடந்த 50 ஆண்டுகளில் பெரும்பாலான மக்கள் சரிவிகித உணவை எடுத்துக் கொள்ளவில்லை. இது மக்களைப் பாதிப்பதோடு பூமியின் பல்லுயிர் சங்கிலியிலும் பல சிக்கல்களை உருவாக்கி உள்ளது.
