PUBLISHED ON : ஜன 28, 2019

மாணவர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி
1. மின்சாரக் கம்பியைத் தொட்டால் ஏன் அதிர்ச்சி ஏற்படுகிறது?
ர.மு.ஹரிபிரசாத், 10ஆம் வகுப்பு, ஸ்ரீவில்லி வரதராஜ் மெட்ரிக் பள்ளி, தேனி.
எந்த ஒரு பொருளின் வழியேயும் மின்சாரம் பாயும்போதும், அந்தப் பொருள் ஏற்படுத்தும் மின்தடை காரணமாக, குறைந்த அளவில் வெப்பம் ஏற்படும். அதன் காரணமாகவே குண்டு பல்பு எரியும்போது சூடாக இருக்கிறது. அதன் மின்தடை அளவைக் கூட்டினால் மேலும் வெப்பம் கூடும். இவ்வாறே மின்சாரம் கொண்டு நீரைச் சூடாக்கும் கருவிகள் (Immersion heater) தயாரிக்கப்படுகின்றன.
நம் மீது மின்சாரம் பாய்ந்தால், அதன் மின்னழுத்தம் (வோல்டேஜ்) சார்ந்தே வெப்பம் அமையும். கூடுதல் வோல்டேஜ் கொண்ட மின்சாரம் பாயும்போது, தசைப் பகுதிகள் வெப்பமடைந்து சிதையும். இதனால் நமக்கு மின் அதிர்ச்சி உணர்வு ஏற்படுகிறது.
இரண்டாவதாக, நமது உடலில் தசைப் பகுதிக்கும் மூளைப் பகுதிக்கும் இடையே தகவல் பரிமாற்றம் செய்வது நரம்புகளே. நரம்பில் பாயும் மின்துடிப்புதான் செய்திகள். உடலில் மின்சாரம் பாயும்போது, நரம்பு உணர்ந்து அதனைச் செய்தி என கொள்ளும். இந்தத் துடிப்பு, குறை அழுத்த மின்சாரம் எனில் சிலிர்ப்பு உணர்வை ஏற்படுத்தும். மின் அழுத்தம் கூடினால் நரம்பின் மற்ற உணர்வுத் துடிப்புகள் மங்கி அதிர்ச்சி உணர்வு மேலோங்கும். இதற்கடுத்த நிலையில் மூளை குழம்பி செயலிழந்து இதயம் துடிப்பதுகூட நின்றுவிடும்.
2. புவியீர்ப்பு விசை இல்லையென்றால் பூமியில் என்னென்ன நிகழும்?
ஜி.செல்வஸ்ரீ நிதி, கேத்ரின்ஸ் பள்ளி, தேவகோட்டை.
மேலே இருக்கும் பொருட்களைத் தன்னிடம் தக்கவைக்க பூமி பயன்படுத்தும் ஒரு சக்திதான் புவியீர்ப்பு விசை. இந்த விசை புவிக்கு மட்டுமே உள்ள ஒரு குணம் அல்ல. ஒவ்வொரு பொருளுக்கும் நிறை (Mass), திறன் பொறுத்து அதனுடைய விசை அளவும் மாறும். நிறையுள்ள பொருட்கள் அனைத்துக்கும் இந்தத் தன்மை உண்டு என நியூட்டன் தெரிவித்தார். அதாவது, பூமிக்கு மட்டுமல்ல; புத்தகம், கல், நிலா என, நிறை கொண்ட எல்லா பொருட்களுக்கும் ஈர்ப்பு விசை உண்டு. நிறையையும் ஈர்ப்பு விசையையும் பிரிக்க முடியாது.
அதாவது, புவியீர்ப்பு விசை இல்லை என்றால், பூமிக்கு நிறை இருக்காது. ஒருவேளை புவியீர்ப்பு விசை பாதியாகக் குறைந்தால், குதிக்கும் சராசரி உயரத்திலிருந்து இருமடங்கு குதிக்க முடியும். அடுத்து, பூமியை நோக்கிய காற்றின் ஈர்ப்பும் குறைய அதைச் சார்ந்த ஆக்சிஜன் அடர்த்தியும் குறையும்.
3. ஹைட்ரோகார்பன் திட்டம் என்றால் என்ன? அதன் நன்மை, தீமைகள் என்ன?
ஏ.டி.அருள் மணிகண்டன், 8ஆம் வகுப்பு, எஸ்.எஸ்.வித்யாசாலா மெட்ரிக். பள்ளி, மேலூர், மதுரை.
ஹைட்ரஜன், கார்பன் அணுக்களின் சேர்க்கையில் உருவான பல்வேறு மூலக்கூறுகளே ஹைட்ரோகார்பன். பெட்ரோலியம், நிலக்கரி, சமையல் எரிவாயு, இயற்கைவாயு மீத்தேன் போன்ற வேதிப் பொருட்கள் 'ஹைட்ரோகார்பன்' எனும் வேதிப்பொருள் வகையைச் சார்ந்தவை. பலகோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பிரளய நிகழ்வுகளில் புதைந்து மக்கிய தாவரம் அல்லது நுண்ணுயிரிகள், அழுத்தம் மற்றும் வெப்பத்தின் காரணமாகப் பல்வேறு வகை ஹைட்ரோகார்பன்களாக உருமாறும்.
இதை எடுத்து எரிபொருளாகப் பயன்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டமே ஹைட்ரோகார்பன் திட்டம். இதுவரை கணிசமாக பெட்ரோலியம், இயற்கைவாயு கிடைக்கும் இடத்தில் மட்டுமே ஆழ்துளைக் கிணறு ஏற்படுத்தி எடுத்து வந்தனர். இப்போது நிலத்துக்கடியில் பாறைகளின் இடையே தேங்கியுள்ள மீத்தேன் போன்ற வாயுக்களையும் இம்முறையில் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
எல்லாவித ஹைட்ரோகார்பன் எரிபொருளும் புதுப்பிக்க முடியாத எரிசக்தி என்பது மட்டுமல்ல; புவிவெப்பமடையச் செய்யும் ஆபத்தும் உண்டு. எனவேதான், பெட்ரோலியம் போன்ற எரிபொருட்களைத் தவிர்த்து புதுப்பிக்கக்கூடிய சூரிய ஆற்றல் போன்ற இயற்கை ஆதாரங்களைப் பயன்படுத்த உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன.
4. எரிவாயு (Gas) மூலம் சமைத்து உண்ணும் உணவால் உடலுக்குத் தீங்கு ஏற்படுமா?
சு.ராஜிதா, 7ஆம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, சுந்தரமுடையான்.
தீய்ந்து போகும் அளவுக்கு வாட்டி உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். தீய்ந்து போவதால் உணவில் வேதிவினை ஏற்பட்டு உருவாகும் புதிய வேதிப் பொருட்கள் உடலுக்குத் தீங்கு என மருத்துவர்கள் கூறுகின்றனர். விறகு, எரிவாயு, மின்சாரம் என, எதை வைத்துச் சமைத்தாலும் தீய்ந்துபோனால் ஏற்படும் கெடுதல் ஒன்றுதான்.
ஆவியில் வேகவைத்த காய்கறிகள் எந்த ஆபத்தும் இல்லாதவை. எந்த எரிபொருளை வைத்து ஆவியாக்கினாலும் அதே பயன்தான். விறகு, வறட்டி, எரிவாயு, மின் ஆற்றல் என, எதைப் பயன்படுத்தினாலும் வெளிப்படுவது வெப்பம்தான். மின் ஆற்றலில் உயர் வெப்பத்தை ஏற்படுத்த முடியும். நிலக்கரியை எரித்தால் மிதமான வெப்பத்தை ஒரே அளவில் பெறலாம். இதனால் வெப்ப அளவு மாறுமே தவிர, வெப்பம் தரும் பொருளால் உடலுக்குத் தீங்கு ஏற்படாது.
